5.8.11

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

1. அரசியல் அறம்

1.1 கெட்டதை விடுங்கள்

    சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
    செய்யுறதைச் செஞ்சுடுங்க
    நல்லதுன்னா கேட்டுக்குங்க
    கெட்டதுன்னா விட்டுடுங்க

    முன்னாலே வந்தவங்க
    என்னென்னமோ சொன்னாங்க
    மூளையிலே ஏறுமுன்னு
    முயற்சியும் செஞ்சாங்க

    ஒண்ணுமே நடக்காம
    உள்ளம் நொந்து செத்தாங்க
    என்னாலும் ஆகாதுன்னு
    எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )

    முடியிருந்தும் மொட்டைகளாய்
    மூச்சிருந்தும் கட்டைகளாய்
    விழியிருந்தும் பொட்டைகளாய்
    விழுந்துகிடக்கப் போறீங்களா?

    முறையைத் தெரிஞ்சு நடந்து
    பழைய நினைப்பை மறந்து
    உலகம் போற பாதையிலே
    உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )

    சித்தர்களும் யோகிகளும்
    சிந்தனையில் ஞானிகளும்
    புத்தரோடு ஏசுவும்
    உத்தமர் காந்தியும்

    எத்தனையோ உண்மைகளை
    எழுதிஎழுதி வச்சாங்க
    எல்லாந்தான் படிச்சீங்க?
    என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )

    [பாண்டித் தேவன்,1959]

கண்ணுள் வினைஞர்


சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அல்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம்? (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.

‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8

விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.

4.8.11

சிந்து இலக்கியம்

சிந்து இலக்கியம்
1. பழனியாண்டவன் காவடிச் சிந்து

நூலாசிரியர்: முத்துக் கறுப்பணன்
பழனிப்பதி வாழும் - வேலர்
பாதம்தனை நாளும்
உளமேதினம் துதிக்க - வினை
ஒடுக்கும் கதிகொடுக்கும்
வளமேவிய பரனே - சுத்த
மடவாழு தந்திமுகனே
அழகாகிய குருவாய் - எனக்
கருள்வாய் முன்பு வருவாய்
1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர் 1

சிவகிரியில் வாழ்வோன் - எனைத்
தினமும் குடி ஆழ்வோன்
தவமேவிய குமரன் - புகழ்
தானே அடியேனே
நவமீறிய காவடிச் - சிந்து
நாடத் தினம் பாட
புவனச் சரசுவதியே - சிந்து
புகல வருவாயே
2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.
நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம் 2

கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி
கானத் தினைப் புனத்தில்
உள்ளமே மகிழ்வாகிக் - கிழ
உருவாய்ப் பரண் ஏகி
தெள்ளிய தினை மாவை - பொசித்
திலகும் அண்டர் கோவை
வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும் 3

துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்
சுத்தனைப் பரிசுத்தனை
அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்
அடியாரைத் தினம்காப்போன்
எண்டிசை பணி நேசன் - தவம்
இலகும் கிரிவாசன்
வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு
வருவாய் தோகைமயிலே
4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்
துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்
அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன் 4

செய்ய தாண்டவ ராயன் - அருள்
சேயனைக் கார்த்தி கேயனை
துய்ய குஞ்சரி பங்கனை - அயில்
துலங்கும் கர துங்கனை
உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்
உளத்தில் குடி இருப்போன்
வையகம் புகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்
சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்
குஞ்சரி - தெய்வயானை 5

ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்
கழகாகிய கண்ணன்
ஞானதே சிக போதன் - நவ
வீரரும் பணி நீதன்
தேனுலா விய கடப்ப - மலர்
செறிவோன் அருள் புரிவோன்
வானவர் பணி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்
நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன் 6

திங்கள் சேர் நுதல் - மீனாள்
தருதேனை முருகோனை
எங்கள் நாயகப் பொருளை - பணிந்
தேற்றார் மனத் திருளைத்
துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்
தொழுதே நிதம் கும்பிட்டேன்
மங்களம் உயர் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி
ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன் 7

இச்செகம் தனில் அடியேன் - உனை
ஏற்ற தினம் போற்ற
மிச்சமாய்க் கலிவருத்த - நான்
மெலிவேனோ அலைவேனோ
அச்சமாய்த் துயர் ஓட - அருள்
நாடகக் கவி பாட
வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை
வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல் 8

பூசுரர் வெகுமானி - சிவப்
பொருப்பில் வளர் ஞானி
தேச மேழும் புகழ் - காவடிப்
பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்
$........ ......... ......... ........
........ ......... ......... ........
வாசனை வடி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.
பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும் 9

படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மான புகழ் குமரன்
துடிமீறு மும்முரசன் - தெய்வம்
தொழுவாழ் கொலு வாசன்
வடிவேல் முருகனையே - கொண்டு
வருவாய் தோகை மயிலே
10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்
பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்
துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த
மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு 10

கர்த்தனாகிய முருகன் - அருள்
கனியும் திரு மருகன்
பத்தர்கள் மிக வாழி! - நிதம்
படிப்போர் தினம் வாழி!
சுத்தமா நகர் வாழும் - முத்துக்
கறுப்பணன் சொல் நாளும்
சித்தமேவிய பெரியோர் - தினம்
செழித்து மிக வாழி!
11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்
முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம் 11


பழனியாண்டவன் காவடிச் சிந்து முற்றும்

1.8.11

பழனி இரட்டைமணி மாலை




பழனி இரட்டைமணி மாலை


[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]

காப்பு

ஞான விரகறியா நானுஞ் சிலதமிழால்
வானவரேத் தும்பழனி வந்தானைத்-தானவரை
வென்றானை வாழ்த்த விரைப்பா திரிவனஞ்சேர்
கன்றானை மாமுகத்தோன் காப்பு.

நூல்
பூமாது கேள்வன் புகழ்மருகன் பொய்யாத
பாமாது வாழ்த்தும் பழனியான்-நாமத்
தனிவேலை யுந்தோகை தன்னையுமே பாட
இனிவேலை கண்டீ ரெமக்கு. [1]

எம்மைப் புரக்குஞ் சிவகிரி யானெம் மிரவொழிக்கும்
செம்மைத் தனிச்சுடர் தேவசிந் தூரந்தெய் வானைவள்ளி
யம்மைக் கிறைபொன் னடிகளல் லாம லடியவர்கள்
வெம்மைப் பிறவிப் பிணிக்கொரு மூலிகை வேறில்லையே. [2]

வேறோ விளக்கும் விளக்கொளியும் வேறிரண்டு
கூறோ நவரசமுங் கூத்தாட்டும் - நாறுமலர்க்
கள்ளுயிர்க்குந் தென்பழனிக் கந்தன் குருபரனென்
உள்ளுயிர்க்கு வேற்றுமையா மோ. [3]

ஆமோ திருவெழுத் தாற்றி யாததென் றஞ்சலிலா
நாமோவை காபுரி நாட்டிருப் போம்வினை நம்மைவிட்டுப்
போமோ கொடுவினை போய்விட வேண்டிற் புனக்குறத்தி
மாமோக வேலன் பழனியை வாழ்த்தென் மடநெஞ்சமே. [4]

நெஞ்ச முருகா நிதிப்பெருக்க ரோவெனக்கோர்
தஞ்ச முருகா தனிமுதல்வா-செஞ்சதங்கைத்
தாளுடையாய் தென்பழனிச் சண்முகா பன்னிரண்டு
தோளுடையாய் நீயே துணை. [5]

துணைக்குங் குமக்கொங்கை மங்கையுந் தானுந்த்ரி சூலனெடுத்
தணைக்குங் குழந்தை பழனிப் பிரான்விளை யாட்டென் சொல்கேன்
கணைக்குங் கடுங்கதிர்ச் செவ்வேல்விட் டேழு கடல்கலக்கும்
பணைக்குந் திசைக்களி றோரெட்டு மேவிடும் பாய்ச்சலுக்கே. [6]

பாயிருள்போற் சூர்மாப் பயந்தோடப் பானுவெனத்
தீயுமிழுங் கூரிலைவேற் செவ்வேளே-கோயிலுனக்
கேரகமோ வெங்கணுமோ வென்னெஞ்ச மோதிருச்செந்
தூரகமோ தென்பழனி யோ. [7]

ஓங்கார மான முருகோன் மருங்கி லொருகைவைத்து
நீங்கா தொருகை பிடித்ததண் டாயுத நெஞ்சைவிட்டு
வாங்கா திவனைப் பழனிவெற் பேறி வணங்கினர்க்குத்
தீங்கா னதுவரு மோபொரு மோநமன் சேனைகளே. [8]

சேனைத் திரளுநெடுஞ் செங்கோலு மங்கையரும்
ஏனைத் திருவு மௌிதன்றோ-நானிலத்து
நம்பிடுவார்க் கும்பழனி நாட்டுக் குருபரனைக்
கும்பிடுவார் தம்மடியார்க் கும். [9]

அடியார்க் கௌிய பழனிப் பிரானுல கன்றளந்த
நெடியார்க்கு மார்க்கு நினைப்பரி யான்பக்க நின்றதெய்வப்
பிடியார்க் கிறைவன் பெயர்சொன்ன பேரைப் பிடிக்கிலன்னக்
கொடியார்க்குப் பூட்டுந் தளைபூட்டு வன்கொடுங் கூற்றிற்குமே. [10]

கூற்றையோ திங்கட் கொழுந்தென்றீர் கூற்றுயிர்த்த
காற்றையோ தென்றலிளங் கன்றென்றீர்-தேற்றக்
கடவீ ரெனிற்பழனிக் கந்தவேண் முன்போய்
மடவீர் மொழிவீரென் மால். [11]

மாலையுஞ் சாந்தும் புழுகோ டளைந்தபொன் மார்பையுமுந்
நூலையுந் தென்பழ னிப்பெரு மானன்பர் நோய்தணிக்கும்
வேலையும் பச்சை மயில்வாக னத்தையும் வெற்றித்தண்டைக்
காலையுஞ் சென்று தொழவேண்டு மாலையுங் காலையுமே. [12]

காலைக் கமலமுகங் காட்டநெய்தல் கண்காட்ட
மாலைக் குமுதமெலாம் வாய்மலர-நூலிடையார்
கூந்தலெனப் பாசிவளர் கோட்டஞ்சூழ் தென்பழனிச்
சேந்தனிடத் தன்றோ செகம். [13]

செகத்தா ரொருவர் திருவாவி னன்குடிச் செல்வன்றன்னை
அகத்தா மரைவைத்துப் பூசைசெய் தாரகத் தாமரைக்கே
நகத்தா மரையிரண் டுள்ளே நடிக்கு நடம்புரிவான்
முகத்தா மரைகளிற் பன்னிரு தாமரை முன்னிற்குமே. [14]

முன்னிற்குந் தென்பழனி முத்துக் குமாரநீ
மன்னிக்கு மன்னருட்கோர் மட்டுண்டோ-உன்னமகிழ்
பார்ப்பானை லோகம் படையென்றாய் மூவடிமண்
ஏற்பானைக் காவென்றா யே. [15]

ஏட்டுக் கணக்கு மெழுத்தாணி தேய்ந்தது மியாங்கள்விற்ற
பாட்டுக் கணக்கும் பலன்பெற லாமென்று பாடிச்சென்ற
வீட்டுக் கணக்குந் தொகைபார்க்கிற் கார்க்கடல் வெண்மணலைக்
கூட்டிக் கணக்கிட லாமே பழனிக் குருபரனே. [16]

குருமூர்த்தி யாய்க்குடிலை கூறியிட்ட வுன்னை
ஒருமூர்த்தி யென்னா துலகம்-இருமூர்த்தி
மும்மூர்த்தி யாய்ப்பழனி மூர்த்தியே கீர்த்திபுனை
எம்மூர்த் தியுமான தென். [17]

என்னையும் பார்க்கச் சிறியோர் பிறப்பு மிறப்புமிலா
உன்னையுந் தெய்வமென் றோதிய நாவி னுலப்பவரைப்
பின்னையுந் தெய்வங்க ளென்பார் பழனிப் பிரான்குமரா
பொன்னையும் பொன்னென் றுரைப்பா ரிரும்பையும் பொன்னென்பரே. [18]

பொற்கன்னி காரவனம் பூங்கற் பகவனமாச்
சொற்க நிகர்பழனித் தூயோனே-நற்கனியைத்
தந்தா வளமுகத்தான் றந்தருள வந்தருள்வாய்
நந்தா வளமெனக்கு நல்கு. [19]

நல்லார்முன் னெங்ஙன முய்யவல் லேன்பழ நான்மறையும்
வல்லாய் பழனி மலைவள்ள லேயிரு மங்கையர்க்கும்
சல்லாப லீலைத் தலைவாவென் னோயைத் தணிக்கும்வண்ணம்
பொல்லா வினைவற்சி யென்றர்ச்சி யேனொரு பூவெடுத்தே. [20]

31.7.11

குடிமங்கலம்.வாதுளி நற்சேந்தனார்


179. பாலை
[பிரிவுணர்த்தியதலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது.]

விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
வெண்தேர் ஓடுங் கடங்காய் மருங்கில்
துனையெரி பரந்த துன்னரும் வியன்காட்டுச்
சிறுகண் யானை நெடுங்கை நீட்டி
5.
1வான்வாய் திறந்தும் வண்புனல் பெறாஅது
கான்புலந்து கழியுங் கண்ணகன் பரப்பின்
விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர்
நல்நிலை பொறித்த கல்நிலை அதர
2அரம்புகொள் பூசல் களையுநர்க் காணாச்
10.
சுரஞ்செல விரும்பினி ராயின் இன்நகை
முருந்தெனத் திரண்ட முள்எயிற்றுத் துவர்வாய்க்
குவளை நாள்மலர் புரையும் உண்கண்இம்
மதியேர் 3வாள்நுதல் புலம்பப்
பதிபெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே.

- கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்.
(சொ - ள்.) 1-10. தலைவ-, விண்தோய் சிமைய விறல் வரைக் கவான்- வானை அளாவிய உச்சியினையுடைய பெருமை தங்கியமலையினது பக்கமலைக்கண்ணே, வெண்தேர் ஓடும் காய்கடமருங்கில் - பேய்த் தேர் ஓடாநிற்கும் காய்ந்தகற்காட்டின் பக்கத்தே, துனை எரி பரந்த துன்அரும்வியன் காட்டுச் சிறுகண் யானை - விரைந்தநெருப்புப் பரவிய கிட்டுதற்கரிய பெரியகாட்டிலுள்ள சிறிய கண்ணினையுடைய யானை, நெடு கைநீட்டி வான் வாய் திறந்தும் - அப்பேய்த்தேரின்பால் தன் நெடிய கையினை நீட்டியும்பெரிய வாயினைத் திறந்தும் - வண்புனல் பெறாஅதுகான் புலந்து கழியும்கண் அகன் பரப்பின் - வளவியநீரினைப் பெறாமல் காட்டைவெறுத்துக்கழிந்துபோம் இடம் அகன்ற பாலைநிலத்தின்கண்,விடுவாய்ச் செங்கணைக் கொடுவில் ஆடவர் - விடுதல்வாய்ந்த சிவந்த அம்பினையுடைய வளைந்தவில்லைக்கொண்ட

மறவரது நல்நிலை பொறித்தகல்நிலை அதர - நல்ல வெற்றி நிலையை எழுதியநடுகற்கள் நிலைகொண்ட வழிகளையுடையவாய,அரம்புகொள் பூசல் களையுநர் காணாச் சுரம்செலவிரும்பினிர் ஆயின் - குறும்பர்கள் செய்யும் பூசலைநீக்குநரைக் காணாத சுரநெறியைக் கடந்து செல்லவிரும்பினீர் ஆயின்;
10-4. இன் நகைமுருந்துஎனத் திரண்ட முள்எயிற்றுத் துவர் வாய் -இனிய நகையினையும் மயிலிறகின் அடியெனத் திரண்டமுட்போலும் கூரிய பற்களையும் சிவந்த வாயினையும்,குவளை நாள் மலர் புரையும் உண்கண் - குவளையின் புதியமலரை யொக்கும் மையுண்ட கண்ணினையும் உடைய, இமதிஏர் வாள் நுதல் புலம்ப - இந்த மதியினை யொத்தஒளி பொருந்திய நெற்றியினையுடையாள்வருந்த, பதிபெயர்ந்து உறைதல் நுமக்கு ஒல்லுமோ - இப்பதியைநீங்கிப்போய்த் தங்குதல் உமக்குப்பொருந்துவதாமோ?
(முடிபு) தலைவ!சுரம்செல விரும்பினிராயின், வாள்நுதல் புலம்பப்பதிபெயர்ந்து உறைதல் நுமக்கு ஒல்லுமோ?
வெண்தேர் ஓடும்வியன் காட்டில், யானை, கை நீட்டியும் வாய்திறந்தும் புனல் பெறாது புலந்து கழிவதும்கொடுவில்லாடவர் நடுகல் நிலைபெற்றஅதர்களையுடையதும் அரம்புகொள் பூசல் களையுநர்இல்லாததும் ஆகிய சுரம் என்க.
(வி - ரை.) கொடுவில் ஆடவர், கரந்தை மறவர் என்க, அரம்பு -குறும்பர், காட்டுத் தலைவர், ‘இன்னகை...வாணுதல்புலம்பஎன்றது, தலைவியின் இனிய நகையும் கூரியபல்லும்துவர் வாயும் உண்கண்ணும் வாணுதலும் ஆய இவை,நும்முன் தோன்றி நும்மை அழுங்குவிப்பன வாகலின்,நீர் பிரிந்துறைதல் ஒல்லாதென்றாள் என்றபடி.

232. குறிஞ்சி
[தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.]

காணினி வாழி தோழி பானாள்
மழைமுழங்கு அரவங் கேட்ட கழைதின்
மாஅல் யானை புலிசெத்து வெழீஇ
இருங்கல் விடரகஞ் சிலம்பப் பெயரும்
5.
பெருங்கல் நாடன் கேண்மை இனியே
குன்ற வேலிச் சிறுகுடி யாங்கண்
மன்ற வேங்கை மணநாள் பூத்த
மணியேர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை வரிக்கும் முன்றில் குறவர்
10.
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர்கலி விழவுக்களங் கடுப்ப நாளும்
விரவுப்பூம் பலியொடு விரைஇ அன்னை
கடியுடை வியனகர்க் காவல் கண்ணி
முருகென வேலன் தரூஉம்
15.
பருவ மாகப் பயந்தன்றால் நமக்கே.

-கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்.
(சொ - ள்.) 1. தோழி-, வாழி-, இனி காண்- இப்பொழுது யான் கூறுவதனை உணர்வாயாக; 1-5. பால் நாள்-நடு இரவில், மழை முழங்கு அரவம் கேட்ட-மேகம் முழங்கும் இடியொலியினைக் கேட்ட, கழைதின் மாஅல் யானை-மூங்கிலைத் தின்னும் பெரிய யானையானது, புலி செத்து வெரீஇ-அவ்வொலியினைப் புலியின் ஒலி எனக் கருதி அஞ்சி, இரு கல் விடர் அகம் சிலம்ப பெயரும்-பெரிய மலையின் முழைஞ்சிடம் எதிரொலி செய்யக் கதறிப் பெயர்ந்தோடும், பெரு கல் நாடன் கேண்மை-பெரிய மலை பொருந்திய நாட்டினையுடைய தலைவனது நட்பு ;
5-11. இனி - இக்காலத்து, குன்றவேலி சிறு குடி ஆங்கண்-குன்றங்களாய வேலியினையுடைய சீறூரிடத்தே, மன்ற வேங்கைமணம் நாள் பூத்த - மன்றத்தின்கண்ணுள்ள வேங்கை மரங்கள் மணநாளாகிய காலத்தே பூத்த, மணி ஏர் அரும்பின் பொன்வீ தாஅய் - மணியை யொத்த அரும்பு மலர்ந்த பொன்போன்ற பூக்கள் பரந்து, வியல் அறை வரிக்கும் முன்றில் - அகன்ற பாறைகளை அழகுறுத்தும் முற்றத்திலே, குறவர் - குறவர்கள், மனை - மனைக்கண்ணுள்ள, முதிர் மகளிரொடு குரவை தூங்கும் -ஆடுதல் வல்ல மகளிரொடு குரவை ஆடும், ஆர்கலி விழவுக் களம் கடுப்ப - ஆரவாரமிக்க விழாக்களத்தை யொப்ப;
11-15. அன்னை-, நாளும்-நாடொறும், விரவு பூ பலியொடு விரைஇ - விரவிய பலவகைப் பூக்களாய பலியொடு பொருந்தி, கடி உடை வியன் நகர் காவல்கண்-காவல் பொருந்திய அகன்ற மலையின் கண் காத்தலைக் கருதி, முருகு என-நமது வேறுபாடு முருகனால் உண்டாய தென்று, வேலன் தரூஉம்-வேலனை அழைக்கும், பருவம் ஆக நமக்கு பயந்தன்று-காலமாக நமக்கு விளைந்தது.
(முடிபு) தோழி! வாழி! காண்; நாடன் கேண்மை, இனி அன்னை முருகென (எண்ணி) காவல் கண்ணி, பலியொடு விரைஇ, வேலனைத் தரூஉம் பருவமாக நமக்குப் பயந்தன்று.
சிறுகுடியாங்கண் வேங்கையின் பொன்வீ தாஅய் அறைவரிக்கும் முன்றிலில் குறவர் மகளிரொடு குரவை தூங்கும் களங்கடுப்பப் பூம் பலியொடு விரைஇ என்க.
(வி - ரை.) மணி - முத்து, முத்துக்களில் பொன்மை செம்மை யுடையவும் உளவென்பது, 1'சந்திர குருவே அங்கா ரகனென, வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்என்பதனாற் பெற்றாம். அரும்புடன் வீ தாஅய் என்றலுமாம். காவல் கண்ணி என்பதற்கு, நம்மை இற்செறித்தலைக் கருதி என்றும், நமக்குத் தீங்குண்டாகாமல் முருகன் காத்தலைக் கருதி யென்றும், இருவகையாகக் கோடலும் பொருந்தும். விழவுக் களம் கடுப்ப என்னும் உவமையால், வேலன் வெறியாடுமிடத்திற்கு மலர் சிதறிக்கிடத்தலுடன் குரவை ஆடுதல் கோடலுமாம்.
கொங்குநாடு : ஆசிரியர்: புலவர் குழந்தை
அகநானூறு உரை ஆசிரியர்: புலியூர்க்கேசிகன்
தமிழக வரலாறு: ஆசிரியர்: புலவர் குழந்தை ……by..sathasivam

30.7.11

புலவர் குழுந்தை!

காவிரிக்கரையில் அமைந்துள்ளது ஈரோடு மாநகரம். அதற்குத்தெற்கே இருபத்தாறாவது கிலோமீட்டரில் இருப்பது ”ஓல வலசு“ என்னும் சிற்றூர். இச்சிற்றூரில் பிறந்தவர்தான் இராவண காவியம் படைத்த ”புலவர் குழுந்தை”. முத்துசாமிக்கவுண்டர் என்கிற பெருமகனாருக்கும் சின்னம்மை என்னும் நற்றாய்க்கும் 1906ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல்நாளன்று தோன்றிய குழந்தைக்கு குழந்தை என்றே பெயரிட்டுப்போற்றி வளர்த்தனர்

இவருடைய காலத்தில் இப்போதிருப்பது போன்று பள்ளிகள் கிடையாது. திண்ணைப் பள்ளி என்றுதான் உண்டு. பலகையில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுத்துப்பயிற்சி செய்வார்கள். அதுபோன்ற பள்ளியில் எட்டு மாதம் மட்டுமே பயின்றார்குழந்தை. ஆனால் தம்முடைய பத்தாவது வயதிலேயே கவிபாடும் திற னைப் பெற்றார். பாட்டின் ஓசை கேட்டு பாடவல்லவர். இவரு டைய பொழுது போக்கே பாட்டெழுதுவதுதான்.

1934ல் சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற் ற புலவர்குழந்தை ஆசிரியராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி னார். 37 ஆண்டுகள் பணிபுரிந்தார் பவானி நகரில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பொறுப்பிலும் இருந்துஓய்வுபெற்றார்.

1926 லேயே இவர் எழுதிய ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்க ரைத் தாலாட்டு, வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரதஉற்சவச்சிந்து வீரகுமாரசாமி காவடிச்சிந்து வெள்ளகோவில் வழிநடைச்சிந்து ஆகியவை அச்சாயின.

2
தந்தை பெரியாரின் மீது அளவுகடந்த பக்தியும் மரியாதையும் கொணடவர். 1948ம் ஆண்டு சென்னையில் நடை பெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. பெரியார் அவர்கள் திருக்குறளுக்குப் பொருளுடன் உரை ஒன்றினை எழுத அறிஞர்குழு ஒன்றி னை அமைத்தார் அதில் முக்கியமானவர் புலவர்குழந்தை.

பெரியார்கட்டளையை சிரமேற்கொண்டு இருபத்தைந்தே நாட்களில் திருக்குறள் முழுமைக்கும் உரைஎழுதினார்.இந்த உரை யுடனே திருக்குறள் குழந்தையுரை என்ற நூல் வெளியிடப்பட்டது.

புலவர்குழந்தை முததம்மை என்னும் நங்கை நல்லாளைக் கரம் பிடித்தார். சமத்துவம் சமரசம் என்னும் இருபெண்மகவுகளை பெற்றார்.

சமத்துவம் என்பவர் கோவையில் பெருமைமிகுவிவசாயக் கல்லூரியில் இள.அறி.(வேளா) பட்டம் பெற்றார்.அந்தக் கல்லூரி யிலேயே பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

சமரசம் என்பவர் இரண்டாவது பெண் பி.ஏ.பி.எல். படித்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு பவானியில் உள்ளார்.

குழந்தையவர்கள் எழுதிய இராவண காவியம் அறியாதவர் இருக்க இயலாது. இராவணனுக்கும் தமிழர்களுக்கும் ஏற்றம் தந்த நூல் கவிச்சக்ரவர்த்தி கம்பருக்குநிகரான பாடல்களை இடம் பெற செய்திருப்பது பெருமைக்குரியது. இந்த அரிய நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடைசெய்யப்பட்டது. 1971ம் ஆண்டு அரசின்தடை நிக்கப்பட்டது.

3
பள்ளியாசிரியராய் இருந்த காலத்தில் மாணவர்கள் யாப்பருங்க லக்காரிகை கற்று கவிபாடுவதில் உள்ள சிரமமறிந்து அதை முற்றிலும் எளிமையாக்கி யாப்பதிகாரம் என்ற நூலை வெளியிட் டார் இதில் எளிய பயிற்சி மூலம் எவரும் கவிபாடும் ஆற்றலை பெற வழி செய்தார்.

அதைப்போலவே தொல்காப்பியத்தின் பொருள்திகாரம் முழுமைக்கும் எளிய உரை எழுதி அனைவரையும் கற்கும்படி எளிதாக்கினார்.

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இன்னூல் என்னும் இலக்கண நூற்பா நூலை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து தொடையதிகாரம் என்ற நூலும் வெளிவந்தது. கொங்குநாட்டின் மீது இஙகுவளர்ந்த தமிழ் புரவலர் மீதும் பற்றுகொண்ட குழந்தையவர்கள் கொங்கு மண்டல சதகம் கூறும் வரலாறுகளைத் தொகுத்து கொங்குநாடும் தமிழும் கொங் குகுலமணிகள் கொங்குநாடு ஆகிய வரலாற்று நூல்களையும் வெ ளியிட்டார்.

தொல்காப்பியர் காலத்தமிழர் வாழ்க்கைப் பண்புநலன் களை ஆராய்ந்து தொல்காப்பியர் காலத்தமிழர் என்ற நூலையும் எழுதினார். இவர் எழுதி இதுவரை வெளிவந்த நூல்கள் மொத்தம் முப்பத்திநான்கு அவற்றில் செய்யுள் வடிவில் 13, உரைநூல் வரி சையில் 3 இலக்கணப் பாங்கில் 3 உரைநடை நூல் வகையில் 15 வெளிவந்துள்ளன.

செய்யுள் நூல்கள்- 1.இராவணகாவியம், 2 அரசியலரங்கம்,3 காமஞ்சரி 4 நெருஞசிப்பழம் 5 உலகப் பெரியோன் கென்னடி
6 திருநணா சிலேடை வெண்பா 7 புலவர்குழந்தைப் பாடல்கள்
8 கன்னியம்மன் சிந்து 9 ஆடி வேட்டை 10 நல்லதம்பி சர்க்க ரைத் தாலாட்டு, 11 வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரதஉற்ச வச்சிந்து 12வீரகுமாரசாமி காவடிச்சிந்து 13 வெள்ளகோவில் வழிநடைச்சிந்து

உரை நூல்கள்
1. திருக்குறள் குழந்தையுரை 2 தொல்காப்பியபொருள்திகாரம் குழந்தையுரை 3 நீதிக்களஞசியம்.

இலக்கணம்
1. யாப்பதிகாரம் 2 தொடையதிகாரம் 3 இன்னூல்

உரை நடை நூல்கள்
1. தொல்காப்பியர் காலத்தமிழர் 2 திருக்குறளும் பரிமேலழகரும் 3புவாமுல்லை 4 கொங்குநாடு 5 தமிழக வரலாறு 6 தமிழ்வாழ்க 7 தீரன் சின்னமலை 8 கொங்குநாடும் தமிழும் 9 கொங்குகுலம ணிகள் 10 அருந்தமிழ்விருந்து 11 அருந்தமிழ்அமிழ்து 12 சங்கத் தமிழ்ச் செல்வம் 13 ஒன்றேகுலம் 14 அண்ணல் காந்தி 15 தமிழ் எழுத்து சீர்திருத்தம்

இவ்வளவு நூல்களையும் எழுதிய குழந்தையவர்கள் வேளாண் என்ற மாத இதழை1946 முதல் 1958வரை நடத்தினார் இத்தகு பெருமை பெற்று புலவர்குழந்தை தமிழுக்காக தம்மை எழுத்தில் ஈடுபடுத்தியது போலவே பேச்சிலும் வல்லவர்

இத்தகுபெருமை பெற்ற புலவர்குழந்தை 1975 ம் ஆண்டு அவரது உடல் நம்மிடமிருந்து நீங்கினாலும் அவரது எழுத்துக் களால் இன்றும் நம்மிடையே அவர் உள்ளார்

Courtesy: Pathivugal



கோயம்புத்தூர் வரலாறு

கோயம்புத்தூர்
கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. காட்டுவாசிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது. கரும்பு வளர்ப்பு நிலையம்,கோயம்புத்தூர், 1927
உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர்.[சான்று தேவை]இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக வந்தேறிகள் குடிபெயர்ந்தனர்.1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.-\\\கோயம்புத்தூர்__பெயர்க்காரணம்

இப்பகுதியை பண்டைக்காலத்தில் கோசர்கள் ஆண்டதால் கோசன்புத்தூர்->கோவன்புத்தூர்->கோயம்புத்தூர் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. காட்டுவாசிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது. கரும்பு வளர்ப்பு நிலையம்,கோயம்புத்தூர், 1927 உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர்.[சான்று தேவை]இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக வந்தேறிகள் குடிபெயர்ந்தனர்.1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
TamilBooks.vcv.co

ராஜராஜசோழன்



2.1 முதலாம் இராசராசன் (கி. பி 985 - 1014)

    ஸ்வஸ்திஸரீதிருமகள் போலப் பெருநிலச் செல்வியும்தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்காந்தளூர்ச் சாலை கலமருத் தருளிவேங்கை நாடும் கங்க பாடியும்நுளம்ப பாடியும் கடிகை பாடியும் - - - - - - - - -5குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்முரட்டொழில் சிங்களர் ஈழமண் டலமும்இரட்ட பாடி ஏழரை இலக்கமும்முந்நீர்ப் பழந்தீவு பன்னீரா யிரமும்திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன்-10எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்தொழுதகை விளங்கும் யாண்டேசெழியரைத் தேசுகொள் ஸரீகோஇராச கேசரிவன்மரான ஸரீஇராசராச தேவர்க்கு யாண்டு...
சோழ மன்னர்களில் ஆட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாக செய்தவர் என்ற பெருமைக்குரியவர் முதலாம் ராஜராஜ சோழன். சுந்தரசோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் 2-வது மகனாக பிறந்த இவரது இயற்பெயர் அருண் மொழி கி.பி. 985-ம் ஆண்டு இவர் சோழப் பேரரசனாக முடி சூட்டிக் கொண்டபோது ராஜராஜன் என்ற பெயரை பெற்றார்.
கி.பி.1014ம் ஆண்டு வரை ராஜராஜசோழன் ஆட்சி செய்தார். தஞ்சையில் இவர் கட்டிய பெரிய கோவில், உலக கட்டிடக் கலை நிபுணர்களால் இன்றும் போற்றி புகழப்படுகிறது. தஞ்சை பெரிய கோவிலை இவர் கி.பி. 1004ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு, அதாவது ஆறே ஆண்டுகளில் கட்டி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாத இறுதியில் தஞ்சை கோவிலின் ஆயிரம் ஆண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது. இந்த நிலையில் ராஜராஜ சோழனின் அரிய செப்பு சிலை ஒன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் காலிகோ மியூசியம்Ó என்ற தனியார் அருங்காட்சியகத்தில் இருப் பது தெரிய வந்தது.
தஞ்சை பெரிய கோவிலை கட்ட ராஜராஜசோழன் முடிவு செய்ததும், அந்த பணியை அவர் வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் என்பவரிடம் ஒப்படைத்தார். அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜராஜ சோழன், அவரது மனைவி லோகமாதேவி ஆகியோரது சிலைகளை பெருந்தச்சன் உருவாக்கினார். அவர் ராஜராஜசோழனின் 3 செப்பு சிலைகளை செய்து தஞ்சை பெரிய கோவிலில் நிறுவினார்.
தஞ்சை பெருவுடையாரை வணங்க வந்த பக்தர்கள் ராஜராஜசோழனையும் வணங்கிச் சென்றனர். ஆனால் அன்னியர் படையெடுப்பின்போது ராஜராஜனின் சிலை சூறையாடி அபகரித்து செல்லப்பட்டு விட்டது.
இறுதியில் எப்படியோ அந்த சிலை ஆமதாபாத்தில் அருங்காட்சியகம் நடத்தி வரும் சாராபாய் பவுண்டேசன் வசம் சென்று விட்டது.
ஆமதாபாத் மியூசியத்தில் உள்ள ராஜராஜன் சிலையானது கல்வெட்டுக்களிலும், ஓலைச் சுவடிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள உருவ அளவுகளை 100 சதவீதம் ஒத்துள்ளது. அதன் நேர்த்தி மூலம் ராஜராஜனின் உண்மையான உருவ அமைப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலின் 1000ம் ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் ராஜராஜனின் சிலையை மீட்டு அதை தஞ்சை கோவிலுக்குள் நிறுவன வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ராஜராஜனின் சிலையை மீட்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி, குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.
தற்போது அருங்காட்சியகம் நடத்தி வரும் சாராபாய் பவுண்டேசன் நிர்வாகிகளுடன் நேரடியாக பேச்சு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் சுற்றுலாத்துறை செயலாளர் வி.இறையன்பு, தொல்பொருள் ஆய்வாளர் ஆர்.நாகசாமி வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பால சுப்பிரமணியன் ஆகியோர் விரைவில் குஜராத் செல்ல உள்ளனர். ஆமதாபாத்தில் உள்ள அருங்காட்சியக நிர்வாகிகளுடன் பேச்சு நடத்துவார்கள்.
ராஜராஜனின் சிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு அன்புப் பரிசாக தரும்படி கேட்டுக் கொள்வார்கள். ராஜராஜன் சிலை மீண்டு வரும்பட்சத்தில் தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரம் ஆண்டு விழா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முழுமையான விழாவாக இருக்கும். தஞ்சை பெரிய கோவிலை தந்த ராஜ ராஜனுக்கு தமிழக மக்கள் செய்த பெரும் நன்றியாகவும் இது இருக்கும்.
சதாசிவம்

ராஜராஜசோழன்கல்வெட்டுகள்

  1. குளித்தலை அருகே ராஜராஜசோழன் கோவில்: வரலாற்று கல்வெட்டுகள் கண்டெடுப்பு

    Date: Oct 07 2010, Thursday
    கரூர்: குளித்தலை அருகே மேட்டு மருதூரில் உள்ள ஆறாஅமுதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன் கோவில், முதலாம் ராஜராஜன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோவிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை அருகே மருதூர் காவிரி தென்கரையில் பழமையான சிவன் கோயில் உள்ளது. சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் (கி.பி. 985-1014)ல் கட்டப்பட்டது. தொல்லியல் துறையின் கல்வெட்டு முனைப்பு திட்டத்தில் கரூர் சேரர் அகழ்வைப்பக காப்பாட்சியர் நாக கணேசன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காப்பாட்சியர் நாக கணேசன் வெளியிட்ட அறிக்கை: ஆயிரம் ஆண்டு கடந்த மேட்டு மருதூர் சிவன் கோவிலில் கருவறை, அர்த்தமண்டபம், கருங்களால் ஆன ஜகதி, பட்டி, குமுதவரி, கால் பிரஸ்தரம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. விமானம் மட்டும் செங்கற்களால் அமைந்துள்ளது. கருவறையின் மூன்று பக்கமும் 22 தூண்களும், பிரஸ்தரத்தில் பூதகணங்கள் வரிசையாக அணிவகுப்பது போலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணின் மேலும் மனிதமுகம் குடைந்து அழகுபடுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கட்டுமானம், சுதை உருவம் சிதைந்துவிட்டதால் அவற்றின் விபரம் முழுமையாக தெரிந்து கொள்ளமுடியாத நிலையில் உள்ளது. கருவறை வெளிப்பக்கத்தில் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுகிறது. கருவறைக்குள் பெரிய அளவில் ஆவுடையாரும், லிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 10 தூண் கொண்ட அர்த்தமண்டபத்திலும், பல்வேறு சிற்ப வேலைப்பாடு உள்ளன. கோவில் முன் நந்தி, சேஷ்டாத்தேவி, விநாயகர் சிற்பம் காணப்படுகின்றது. நுழைவாயிலில் தென்புற நிலைக்காலில் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டு 21 வரிகளில் உள்ளது. அரசனின் 11வது ஆட்சிக்காலம் மூலம் இவ்வூர், கோவில் இறைவன், மன்னனை குறித்து அறிந்து கொள்ள முடிகிறது. கல்வெட்டில், "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜசேகரி' என முதலாம் ராஜராஜனை குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கி.பி.996ல் கோவில் கட்டப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. கேரளாவிலுள்ள விழிஞம் கோட்டை, காந்தளூர்சாலை ஆகியவற்றை வெற்றிகொண்டதை நினைவு கூறும் வகையில், "சாலைக்கல மறுத்த  கோவி ராஜராஜசேகரி' என்ற அடைமொழியுடன் மன்னன் குறிப்பிடப்பட்டார் என்பது தெரியவருகிறது.மேட்டு மருதூர், "மாதான மருதூர்' என்றும், இங்குள் ஈஸ்வரன் "ஆராவமிதீஸ்வரர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழ பேரரசில் "மீய் கோட்டு' நாட்டில் அமைந்த சிற்றூராக மேட்டுமருதூர் இருந்துள்ளது. முதலாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டு சிறப்புடன் விளங்கிய சிவன் கோவில் தற்போது முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. மெத்தனத்தில் மாவட்ட நிர்வாகம்: ஆறா அமூதீஸ்வரர் சிவன்கோவில் ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட  பழமையான கோவிலாக உள்ளதை அறிந்த, கரூர் முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டார். இங்குள்ள பழமையான சிற்பங்களை பாதுகாக்கவும், கோவிலை புதுப்பிக்கவும், நகர புணர் அமைப்பு நிதியின் கீழ் 22 லட்சம் ரூபாய் நிதிஒதுக்கீடு செய்தார்.  நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர்

உலகில் இன்பம் (சிம்மேஉன்னதமான இசை என்பது புராண காலத்திலிருந்து மிகவும் போற்றப்பட்டு வந்த ஒரு கலை. இசை என்பது குரலிசையாகவும் இசைக் கருவியின் மூலம் வரும் இசை என இரு வகையாகப் பிரிக்கப்பட்டு ரசித்து வரப்பட்டன. இந்த கால கட்டத்தில் தெய்வ ஆராதனையாக பாடலுடன் ஆடலும் சேர்ந்து பரிமளிக்கத் தொடங்கியது. தமிழிசை வளர்வதற்கும், அந்த இசைபால் ஒரு ஈர்ப்பு வருவதற்கும் முக்கிய காரணமாக சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியவர்கள் தான் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் என்ற நால்வர். இவர்களை அடுத்து ராமலிங்க ஸ்வாமிகள், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தஞ்சை பொன்னய்யா, தஞ்சை வடிவேலு, இலக்குமணப்பிள்ளை, பாபநாசம் சிவன் போன்ற பலர் தமிழிசை வளர்ச்சிக்கு உதவியவர்கள். இந்த இசை மேதைகள் தஞ்சை தரணி பெற்றெடுத்த விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள். இதே தஞ்சை தரணியில் பிற மொழியில் பாடல்கள் இயற்றி இருந்தாலும் சாகாவரம் பெற்ற தியாகய்யர், சாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் போன்றோரும். செம்மங்குடி சீனிவாச ஐயர், மஹாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி, மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிறி சிப்ரமண்ய ஐயர், துறையூர் ராஜகோபால சர்மா, மன்னர் குடி நரசிம்ம ஐயங்கார், மாதிரிமங்கலம் நடேசஐயர், டி.என்.ராஜரத்தினம்பிள்ளை, மாயவரம் கிருஷ்ணய்யர், ஸ்ரீ வாஞ்சியம்மணி ஐயர், முடி கொண்டாள் வெங்கடராம ஐயர் கோனேரி ராஜபுரம் வைத்தயநாதஐயர், வழூவூர் ராமையாபிள்ளை, மணக்கால் ரங்கராஜன், கே.பி. சுந்தராம்பாள், என்.சி.வசந்த கோகிலம், சரித்திர நாவல்களுக்கு பெயர்போன கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல மேதைகள் உதித்த புண்ணயபூமி தஞ்சை தரணி. நாடகம், சினிமா, சாஸ்திரிய சங்கீதம் என்ற மூன்று துறையிலும் மகோன்னதமாக விளங்கிய எம்.கே. தியாகராஜபாகவதர் உதித்ததும் தஞ்சை தரணியில்தான். இசை நாடகப் பேரொளி, திரைஉலகின் ஏக சக்ராதிபதி, சங்கீத கலா சாகரம், கந்தர்வகானரத்ன ஏழிசை மன்னர் என்ற பல பட்டப் பெயர்களுடன் சரிரம், சாரிரம் இரண்டுமே பொன்போன்று அமைந்து, உலா வந்த அந்த மாபெறும் இசை மேதையைப் பற்றி கூறுமுன், 1920 நூற்றாண்டுகளில் கலை வளர்ந்த விபரம் அறிவோம்.

கி.பி. 1798-ல் தஞ்சையை ஆண்ட இரண்டாவது சரபோஜி மன்னர்தான் தஞ்சை பெரிய கோவில் விழாக் காலங்களில் ஆண்டு தோறும் நாடகம், நாட்டிய நாடகம் நடக்க பெரிதும் உதவியவர் என்று சரித்திரம் கூறுகிறது. பக்திரசமான புராணக்கதைகளுக்கு வீரம் சொரிந்த கதைகளும் நாடகங்களுக்கு கருவாக எடுத்துக் கொள்ளப்பட்டது. நாட்டியத்தை சதிர்கச்சேரி என்று அழைக்கப்பட்ட காலம் அது.

20 வது நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடக்தின் முன்னோடியாக இருந்தது தெருக்கூத்துகள். பக்திரசம் கொண்ட தெருக்கூத்துக்கள் மக்களிடையே கடவுள் பக்தி, தேசப்பக்தி, ராஜசேவை இவைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துவதாக இருந்தது. இருந்தாலும் அந்த கால கட்டத்தில் நாடக நடிகர்களை கூத்தாடிகள் என்றும் இந்த தொழில் ஒரு இழிவான தொழில் என்ற நிலையும் இருந்ததைமறுப்பதற்கில்லை.

நடிகர்களுக்கு சமுதாயத்தில் ஒரு கௌரவத்தையும் மதிப்பையும் பெற்றுத்தந்த முதல் கலைஞர் திரு.தியாகராஜ பாகவதர்தான் என்று சொன்னால் மிகையாகாது. அந்த கால் கூட்டத்தில் பல நாடக் கம்பெனிகள் குறிப்பாக மதுரைபாலமீன ரஞ்சனி சங்கீத சபா, ஸ்ரீ பால சண்முகாநந்த சபா, கன்னையர் கம்பெனி, நவாப் ராஜமாணிக்கத்தின் மதுரை ஸ்ரீ தேவி பால விநோத சபா, ஸ்ரீ ராம பால கான விநோத சபா, எஃப்.ஜி.நடேச ஐயரின் திருச்சி ரசிக ரஞ்சனி சபா போன்ற கம்பெனிகள் பிரபல மடைந்ததும் அல்லாமல் பல மகோன்னத கலைஞர்கள் எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தரம்பாள், டி.கே.எஸ்.சகோதரர்கள், என்.எஸ்.கிருஷ்ணன், காளி ரத்னம், கே.பி.கேசவன், கே.கே.பெருமாள், கே.பி.காமாட்சி, பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ராமசந்திரன், எஸ்.வி.சகஸ்வரநாமம், எம்.வி.மணி. தியாகராஜ பாகவதர், போன்றவர்களை கலை உலகுக்கு அறிமுகப்படுத்தினார்கள். டி.சந்தர்ராவ் பரமேஸ்வர ஐயர், டி.வி.ராமகிருஷ்ணன், ரங்கசாமி ஐயங்கார், கே.எஸ். அனந்தநாராயண ஐயர் போன்றோர் பெண் வேடமிட்டு நடித்த கலைஞர்கள்.

சாகாவரம் பெற்றுவிட்ட இசை சக்கரவர்த்தி திரு.தியாகராஜ பாகவதர் அவர்களின் பங்கு நாடக, சினிமா, சாஸ்திரிய சங்கீத உலகில் எப்படி போற்றப்பட்டது. என்பதையும் பொருள் செரிந்த அவருடைய பாடல்களைப் பற்றியும் சற்று ஆராய்வோம்.

சித்திரம், சிற்பம், மாட மாளிகைகள், நிர்மாணம், போன்றவற்றில் புராண இதிகாச களிருந்து மிகப் பிரமாலன சிற்பிகள் ஸ்தபதிகள் உதித்த மகோன்னதமான விஸ்வகர்மா குலத்தில் உதித்த திலகம் தான் திரு. தியாகராஜ பாகவதர். தேவ லோகத்தில் பல மாட மாளிகைகளை நிர்மாணித்தவர் விஸ்வகர்மா.

பூலோகத்திலும் அதிலும் தென்னிந்தியாவில் விஸ்வகர்மா குல ஸ்பதிகளும் சிற்பிகளும் நிர்மாணம் செய்த கலை நயம் படைத்த ஆலயங்கள் எண்ணிலடங்கா, கலைக்கென்று பிரசித்தி பெற்ற ஒரு ஒப்பற்ற குலமாம் விஸ்வகர்மாகுலம் அதன் திலகமாக 1.3.1910 அன்று ஷராப்பு கடை கிருஷ்ணமூர்த்தி ஆசாரியின் மூத்த புதல்வராக உதித்தவர் திரு. தியாகராஜ பாகவதர் அவர்கள். அவர் பிறந்த போது அவருடைய குடும்பத்திற்கு ஏழ்மையான சூழ்நிலை. பிறவியிலேயே தியாகராஜ பாகவதர் கேட்போர் மதிமயங்கும் அபார குரலினிமை வரப்பிரஸாதமாக அமைந்து லட்சமிகடாஷம் இல்லையென்றாலும் கலைத்தாயின் பரிபூர்ண ஆசியும் அனுக்ரஹமும் தியாகராஜனக்கு இருந்தது. சிறு வயதில் சில காலம் மாயவரத்தில் இருந்து விட்டு பெற்ற தாயின் ஊராய தஞ்சைக்கு தியாகராஜனின் குடும்பம் குடிபெயர்ந்தது. தியாகராஜனின் பாட்டனார் திரு. முத்துவீர ஆசாரிக்கு திருச்சி பாலகரையில் ஒரு சிறிய ஓட்டு வீடு இருந்தமையால் தியாகராஜனின் குடும்பம் நிரந்தரமாக திருச்சிக்கு குடிபெயர்ந்தது. நகைகளுக்கு நகாசு செய்யும் தொழில் நடத்தி வந்தார் திரு.கிருஷ்ணமூர்த்தி. சிறுவயதில் தியாகராஜன் அதி அற்புதமாக பாடினாலும் அவருடைய தந்தையார் தியாகராஜனை சங்கீத உலகிற்கு அனுப்ப விரும்பவில்லை. காரணம் அப்போது சங்கீத்தில் பெரிய மதிப்பும் இருந்ததில்லை வருமானமும் இருந்ததில்லை. இதன் விளைவாக தியாகராஜன் படிப்பதற்கு திருச்சி பாலக்கரையில் உள்ள பழைய ஜபமாதா கோவில் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். சங்கீதத்தில் இருந்த ஆர்வம் தியாராஜனுக்கு படிப்பில் இல்லை. பள்ளி சென்று வந்ததும் நகைக்கடையில் வேலை. இந்த சூழல் தியாகராஜனுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. தந்தை இல்லாத போது நகைக்கடையில் பாட ஆரம்பித்து விடுவான் தியாகராஜன். தெருவில் போவோர் வருவோரெல்லாம் தியாகராஜனுடைய தேவ கானத்தில் மயங்கி நின்று விடுவார்கள்.

தந்தைக்கு தியாகராஜன் பாடயது பிடித்து தான் இருந்துதென்றாலும், வாழ்க்கைக்கு அது ஒவ்வாத விஷயமாகபட்டது அருக்கு. பள்ளிக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு பலமுறை உய்யக்கொண்டான் ஆற்றில் இறங்கி பாட ஆரம்பித்து விடுவான் தியாகராஜன். உய்யக்கொண்டான் ஆற்றில் கரையிலிருக்கும் குழுமியானந்த சுவாமிகள் மடத்திற்குப் போவதையும சுவாமிகளை தரிசிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தான் தியாகராஜன். இதனால் தானோ என்னவோ பிற்காலத்தில் வாழ்க்கையை வெறுத்து ஏறத்தாழ சித்தராகவே விளங்கினார் பாகவதர்.

சிறுவயதில் தியாகராஜனின் சங்கீத ஆர்வம் தந்தையின் கெடுபிடி அதிகமாகக் காரணம் இருந்தது. விளைவு ஒரு நாள் தியாகராஜன் வீட்டை விட்டே போய் விட்டான். துடித்துப்போன பெற்றோர்கள் தியாகராஜனை தேடாத இடமில்லை. கடைசியில் ஒரு நண்பர் மூலமாக கடப்பாவில் தியாகராஜனை பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தார் தியாகராஜனின் தகப்பனார். தியாகராஜன் கடப்பாவில் இருந்த காலத்தில் அவன் பாடிய பாட்டுக்கள் தேவகானமாக இருந்து மக்களை மெய்மறக்கச் செய்திருந்தன. கடப்பாவிலிருந்து திரும்பும் போது திருப்பதி சென்று ஏழுமலையான் தரிசனமும் செய்து விட்டு வீடு திரும்பினர் தந்தையும் மகனும். இனியும் தியாகராஜனின் சங்கீதத்திற்கு அணைபோட்டு உபயோகமில்லை என்றறிந்த தியாகராஜன் தந்தை தியாகரஜனின் விருப்பப்படியே நடந்து கொண்டார். அந்த காலகட்டத்தில் தியாகராஜன் கலந்து கொள்ளாத பஜனை கோஷ்டியே திருச்சியில் இல்லை. ஒரு சமயம் தியாகராஜனின் பாட்டை நேரில் கேட்ட திரு.நடேச ஐயர் தியாகராஜன் தன் நாடக கம்பெனியில் பால பார்ட் நடிகனாக நடிக்க தியாகராஜனின் தந்தையின் அனுமதியுடன் சேர்த்துக் கொண்டார்.

ORIENTAL SCENERY .TAMILNADU











இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த 18ம் நூற்றாண்டு ஓவியர்களான தாமஸ் டேனியல் மற்றும் வில்லியம் டேனியல் ஆகியோரின்Aquatints என்னும் உலோகத்தில் படியெடுக்கப்பட்ட ஓவியங்கள்Aquatints என்பவை ஈயம் அல்லது தாமிரப் பட்டயங்கள் மீது அச்செடுக்கப்பட்ட ஓவியங்களாகும். Aqua என்றால் நீர். Tint என்றால் பிரதி அல்லது அச்சு என்று கண்காட்சியின் கையேட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த Aquatints என்னும் ஓவியங்களை உருவாக்க Camera Obscura என்னும் அதிபுத்திசாலித் தனமான சாதனத்தை உபயோகித்து இருக்கிறார்கள். இருவண்ணங்களில் நீர் ஓவியங்களைப் போன்ற சாயலில் பெரும் மலைகளையும் மலைக்க வைக்கும் கட்டடங்களையும் அதி தத்ரூபமாக வடித்திருக்கிறார்கள் இந்த இரு டேனியல்களும். Camera Obscura உபகரணத்தின் உதவியுடன் எடுக்கப்பட்ட படங்களின் மீது தைல வண்ணங்களையும் நீர் வண்ணங்களையும் குழைத்து ஒரு வகையான மஞ்சள், சிகப்பு மற்றும் பச்சை நிறங்களில் ஓவியமும் அல்லாது புகைப்படமாகவும் அல்லாது மிகப்பளிச்சென்று நிழலை நிஜமாக வடித்த Aquatint ஓவியங்கள் நம்மை 18ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்கின்றன. இந்த இரு டேனியல்களும் 1786 துவங்கி 1794 வரை இந்தியா முழுக்கப் பயணித்து இருக்கிறார்கள். வில்லியம் டேனியலின் சித்தப்பா தாமஸ் டேனியல். வில்லியம் டேனியல் தன்னுடைய சிற்றப்பன் தாமஸ் டேனியலுடன் 1784ல் இந்தியாவுக்குப் பயணப்பட சித்தமானபோது இவருடைய வயது 16. இந்த இரு டேனியல்களும் இயற்கைக் காட்சிகளை தத்ரூபமாக வரையும் ஓவியர்களாக மட்டுமல்லாமல் ரசனை மிகுந்த பயணிகளாக, சாகசங்களை விரும்பி ஏற்கும் கலைஞர்களாக, கலையின் மீது அளவற்ற தாகம் நிறைந்தவர்களாகத் தங்கள் பயணங்களை அமைத்துக் கொண்டு இந்தியாவை வலம் வந்திருக்கிறார்கள். முகலாயர்களின் மாளிகைகள் மற்றும் திராவிட நாட்டின் பல முக்கியமான ஸ்தலங்களை தங்கள் ஓவியக் கண்களால் பதிவு செய்து கொண்டு தங்கள் நாட்டுக்குத் திரும்பி இருக்கிறார்கள். வில்லியம் டேனியல் ஒரு டயரியில் குறிப்புக்களையும் கையோடு தைலம் மற்றும் நீர் ஓவியங்களாக தான் கண்ட அற்புதமான இயற்கைக் காட்சிகளையும் மாளிகைகளையும் ஆலயங்களையும் நீர் அருவிகளையும் பதிவு செய்து இங்கிலாந்து எடுத்துச் சென்றிருக்கிறார்.1794ல் லண்டன் திரும்பிய இரு டேனியல்களும் தாங்கள் இந்தியாவில் பதிவு செய்த ஓவியங்களை Camera Obscura கருவியின் துணையுடன் சுமார் 144 Aquatint களை உருவாக்கி அவற்றை Oriental Scenery என்னும் தலைப்பில் ஆறு வால்யூம்களாக வெளியிட்டிருக்கிறார்கள். இந்த 144 Aquatint ஓவியங்களும் இந்தியாவின் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் காலத்தின் கட்டிடக் கலை, ஓவியம் ஆகியவற்றின் மேன்மைக்கு சாட்சியங்களாகத் திகழ்கின்றன. சென்னையில் துவங்கி பெங்களூர் கல்கத்தா, பீகார், ராஜஸ்தான் என்று பல இடங்களில் யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்கள். கப்பல், பணியாட்கள் புடைசூழ பல்லக்குகளில் சாலை வழிப்பயணம், என்று பெரிய யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்கள். (சென்னை, பெங்களூர் செல்லும் வழியில் எங்கள் ஊர் கிருஷ்ணகிரியையும் எட்டிப்பார்த்திருக்கிறார்கள். ஓசூர், சித்திரதுர்க்கம், ராயக்கோட்டை, சந்திரகிரி என்று திப்புசுல்தான் ராஜ்ஜியத்திலும் பதிவுகள் செய்திருக்கிறார்கள் மூன்றாம் மைசூர் போர் முடிவுக்கு வந்த நேரம். எங்கள் அரசன் திப்பு சுல்தானை கிழக்கிந்தியக் கம்பெனி வஞ்சகத்தால் தோற்கடித்த நேரத்தில் இந்த இரு டேனியல்களும் திப்புவின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் அலைந்திருக்கிறார்கள். போரின் சீரழிவுகள் எதையும் இவர்கள் பதிவு செய்யவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் பதிவு செய்தவை எல்லாம் மனிதனும் இயற்கையும் உருவாக்கிய பிரம்மாண்டங்களையும் இந்தக் கலவையில் உருவான இயற்கை எழில்களையும், மாளிகைகள் மற்றும் ஆலயங்களையும்தான்தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் 3 செப்டம்பர் 1788ல் தங்கள் இந்திய யாத்திரையை துவங்கி இருக்கிறார்கள். கல்கத்தாவில் இருந்து கங்கை நதி வழியாகப் படகில் துவங்கிய இந்தப் பயணம், மே 1789ல் ஸ்ரீநகரில் முடிந்திருக்கிறது. மீண்டும் கல்கத்தா திரும்பிய போது வழியில் பல சரித்திர ஸ்தலங்கள், அரண்மனைகள், ஆலயங்கள் என அலைந்து அலைந்து பதிவுகளைத் தொடர்ந்து இருக்கிறார்கள்.10 மார்ச் 1792ல் கல்கத்தாவில் இருந்து சென்னைக்குக் கடல் வழியாகப் பயணித்து சென்னையில் இருந்து பெங்களூர் வரை பயணித்து பல இடங்களை ஓவியங்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள். பல்லக்கு, எருது பூட்டிய வண்டி, மற்றும் பல பணியாட்களுடன் இவர்களுடைய தென்னிந்தியப் பயணம் தொடர்ந்துள்ளது. அதே போல மேற்கு இந்தியாவிலும் பயணித்து எல்லோரா, எலிஃபெண்டா குகைகள் போன்றவற்றையும் வரைந்து தள்ளி இருக்கிறார்கள்..