21.8.11

குடிமங்கலம்

இவ்வூர்சங்ககாலத்தில்கொடிமங்கலம் என்னும்பெயருடன் இருந்துள்ளது மக்களின் உட்குழுக்களைச் சுட்டிய "குடி" என்ற வடிவம், மக்களின் இருப்பிடங்களையும் சங்ககாலத்தில் சுட்டியிருக்கின்றது. சங்ககால ஊர்ப்பெயர்களில் பல "குடி" என்று முடிகின்றன.

உதாரணமாக சில ஊர்கள்: உத்தங்குடி, சாத்தங்குடி

"மங்கலம்" என்பது தூய்மை, நிறைவு போன்ற பொருள்களில் வழங்கி, மக்களின் குடியிருப்பினையும் குறிக்கத் தொடங்கியது. "மங்கலம் என்ப மனைமாட்சி" என்பது குறள். இச்சொல் சங்க காலத்திலேயே ஊர்ப்பெயர்களுடன் இணைந்து வந்துள்ளது. கிள்ளிமங்கலம், கொடிமங்கலம் என்னும் ஊர்கள் சங்ககாலத்தில் இருந்திருக்கின்றன.

மக்கள் குடியிருப்பினைக் குறித்தாலும், இடைக்காலத்தில் சிறப்பாகப் பார்ப்பனர்களின் குடியிருப்புக்களே "மங்கலம்" என்று குறிக்கப்பட்டன. அக்கால அரசர்கள் பார்ப்பனர்களுக்கு நிலங்களைக் கொடையாகத் தரும்பொழுது தம் பெயர் விளங்கத் தம் பெயருடன் "சதுர்வேதி மங்கலம்" என்பதனை இணைத்துப் பெயர் சூட்டி ஊரமைத்துத் தந்திருக்கின்றனர்.[27] இவ்வடிவத்தின் முற்பகுதியாகிய சதுர்வேதி காலப்போக்கில் மறைந்தது. இருக்கு முதலான நான்கு வேதங்களைக் கற்ற பார்ப்பனர் சதுர்வேதி எனப்பட்டார்.

20.8.11

இராஜராஜேச்சரம்







18.8.11

மகாகவி பாரதியார் கவிதைகள்

1. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
(செந்தமிழ்)

2.

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
(செந்தமிழ்)

3.

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

4.

முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

5.

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.
(செந்தமிழ்)

6.

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.
(செந்தமிழ்)

7.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

8.

சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு.
(செந்தமிழ்)

9.

விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.
(செந்தமிழ்)

10.

சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது


கோவை செட்டிபாளையம்
மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது


கோவை செட்டிபாளையம்
மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய
திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது


நூலின் காலம் - 18-ஆம் நூற்றாண்டு
இரா. ந. கல்யாணசுந்தரம் ஏடு பெயர்த்து எழுதிய தேதி: 16 - ஆகஸ்டு - 1939
வையவிரி வலையுலா வைப்பு - நா. கணேசன், ஹூஸ்டன்

    காப்பு

    பின்முடுகு வெண்பா வல்லோர் புகழ்பேரூர் வாழ்பட்டி நாதன்மேற் சொல்லுங்கண் ணாடிவிடு தூதுக்கு - வெல்லுநட னம்பயில உம்பர்தொழு நம்பனரு ளும்பெரிய கம்பகும்பத் தும்பிமுகன் காப்பு

    நூல்

    சிவபெருமான் துதி
    கார்போலும் மேனியனுங் கஞ்சமலர்ப் புங்கவனும்
    பார்கீண்டும் விண்பறந்தும் பன்னெடுநாள் - ஆர்வமுடன்

    தேடி வருந்தித் திரிந்துந் தெரியாமல்
    நீடுசுட ராவுயர நின்றருள்வோன் - பீடுடைய

    தக்கன் சிரத்தைத் தகர்த்துத் தகர்ச்சிரத்தை
    மிக்கத் திருத்தும் விறலாளன் - இக்குதனுக்

    காமாரி சூலதரன் காரிலகு கந்தரத்தன்
    தீமைப் புரத்தைச் சிரித்தெரித்த - கோமான்

    விடையன் நிருத்தமிடு மெய்யன் அலகைப்
    படையன் உமைக்குப் பதியான் - முடிவிலாச்

    சங்கரன்வெண் ணீற்றன் சதாசிவன்கங் காளனெரி
    தங்குங் கரத்தன் சபாபதியன் - கொங்கவிழும்

    கூவிளமார் கங்கைமதி கோளரவு தும்பைகொன்றைப்
    பூவறுகு சூடும் புரிசடையான் - காவியும்வெங்

    காலுஞ்செந் தாமரையும் கார்விடமுஞ் சாகரமும்
    வேலுங் கருவிளமும் மீனமும் - நீலவண்டும்

    மானுமம்பும் மாவடுவும் வாளுமொப்பற் றேயகன்று
    தானே யிரண்டுஞ் சரியாகி - வானுலகில்

    மண்ணுலகில் உற்பவித்து வாழும் உயிர்க்கெல்லாம்
    எண்ணில் அருளளித்தும் இன்புற்ற - கண்ணிணைசேர்
    10

    பேதை மரகதமாம் பெண்ணைத்தன் மெய்யிலொரு
    பாதியிலே வைத்துகந்த பட்டீசன் - தீதணுகாப்

    பேரைநகர் வாழும் பெருமான்றன் மெய்யழகோர்
    காரணமாய் உன்னிடத்தே காணுதலுஞ் - சீரிலகு


    கண்ணாடியின் சிறப்பு

    சுந்தரங்கள் எல்லாம் தொகுப்பில் ஒருவடிவாய்ச்
    சுந்தரரைக் காட்டும் தொழிலாடி - அந்தரத்தில்

    அம்புவியில் உள்ளபொருள் அத்தனையு நீயாடிக்
    கம்பிதஞ்செய் வித்திடுவாய் கஞ்சனமே - கொம்பனையார்

    வித்துருமப் பொற்றரள மிக்கபணி பெற்றிடினு
    மத்தவளை யுற்றிருப்பா யத்தமே - முத்தநகை

    மானார் கபோல வளத்துவமை பார்க்கிலுனைத்
    தானே புகழுந் தருப்பணமே - மானேயார்

    நாட்டங்கம் நாற்றிசையும் நாடிலுமுன் னேயசைய
    மாட்டாமற் செய்தபடி மக்கலமே - நீட்டுபதி

    னாறுபசா ரஞ்சிவனுக்கு அன்பினொடு செய்யவதில்
    மாறிலா தேந்துமொளி வட்டமே - வீறுலகில்

    தன்னேரி லாதமன்னன் தானிருக்கும் ஆசனத்தின்
    முன்னே யிருக்கு முகுரமே - துன்னியிடும்

    பைந்தார் நகரிற் படுதிரவி யங்களினில்
    ஐந்தா மதில்முதற்கண் ணாடியே - முந்து
    20

    நயமான லோகத்தில் நாடுவாய் நற்கல்
    நயமாகில் அங்கே நடிப்பாய் - இயல்பான

    அப்பு வழியே அருஞ்சரக்குக் கொண்டணைவார்
    கப்பல் நடத்தியிடு கண்மணியே - துப்புறுவார்

    ஆசையினால் வேதாந்த ஆகமநூல் பார்க்குமவர்
    நாசியிலே நின்றுணர்த்து நாயகமே - பேசரிய

    நண்ணுபொறி ஐந்தினையு நாடவறி யாதவென்றன்
    கண்ணிணைக்கும் கண்மணியாய்க் காட்டிடுவாய் - விண்ணுமண்ணும்

    எட்டுத் திசையோடு இருந்தவொரு பத்தினையும்
    கட்டுத் தவிர்த்திடுவாய் காணாதே - மட்டாரும்

    நூலணிந்த மெய்வலத்தை நொய்தினிட மாக்கியிடப்
    பாலைவலப் பாலிருத்தும் பக்குவனே - சால

    இரசமுடன் சேர்ந்திருப்ப தென்றறியார் உன்னை
    நிரசமென்று சொல்லுவது நேரோ - பரவசமாய்க்

    கண்ணாடி யுண்டதனங் கண்ணாடி நில்லாமற்
    கண்ணாடி யேன்விரும்புங் கண்ணாடி - திண்ணமதாய்

    மின்னார்க்கும் ஆடவர்க்கும் வேண்டுபொருள் வெவ்வேறே
    சொன்னாலும் உன்னையே சூழ்ந்துகொண்டு - முன்னிருத்திப்

    பம்பரத்தை வென்றதனப் பைந்தொடியா ருங்கடல்சூழ்
    அம்புவியைத் தாங்கும் அரசருமே - தம்பல்லைக்
    30

    கெஞ்சிப் பணிந்திட்டுன் கீழ்ப்பட்டார் பாரிலுன்னை
    மிஞ்சினபேர் ஆருரையாய் மெல்லோனே - அஞ்சீர்

    அயனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை

    நிறையுஞ் சராசரங்கள் நீடும் தராதலத்தில்
    மறைநாலு வாயான மாண்பால் - நிலையாத

    கஞ்சனம்பேர் காட்டுகையாற் காதலித்தோர்க் கானதினாற்
    பஞ்சடிசேர் மானாரைப் பண்ணுறலாற் - கஞ்சமலர்த்

    தேவனே யென்று தெரியும் பெரியோரிப்
    பூவுலகில் உன்னையே போற்றிடுவார் - மேவிவரு

    அரிக்கும் கண்ணாடிக்கும் சிலேடை

    கஞ்சனங் கம்படலாற் கட்டுண் டமைந்ததினால்
    அஞ்சொலார் தன்கைவசம் ஆனதினால் - மிஞ்ச

    ஒருவடிவாய் நின்றமையால் உள்ளே தெரிய
    உருவெடுத்துக் காட்டுகையால் ஓதும் - பெருவானும்

    மேதினியும் எல்லாந்தன் மெய்யில் அடக்குகையால்
    ஆதிநா ராயணநீ யாமெனலாம் - கோதிலார்

    அரனுக்கும் கண்ணாடிக்கும் சிலேடை

    பாகத் திருத்தலாற் பன்னீருந் தங்கினதாற்
    சோகத்தை யார்க்குந் துடைத்தலால் - மாகத்தைத்

    தந்துள்ளே காட்டுகையால் தக்கவருள் நாட்டுகையாற்
    சிந்துகே சம்முரித்துச் சேர்ந்தமையால் - முந்தவரும்

    அம்பலத்தில் ஆடியென்றும் ஆனதினால் பேரைநகர்
    நம்பனுக்கு நேரான நாயகமே - உம்பருக்கும்
    40

    எட்டாமே மூவருக்கும் ஏமமாய் நின்றருளும்
    பட்டீசன் என்றுமனம் பாவிப்போன் - இட்டமுடன்

    ஆருறினுங் கைசேரு மத்தமே ரூபமதாய்ச்
    சேருவாய் கீழ்மேல் சிறப்பிலதாய்ப் - பாரிற்

    கணிகைமா தென்றுன்னைக் காணலாங் கண்ணே
    இணைபகரா வாழ்வே இனிதே - கணவருடன்

    ஊடுங் கனங்குழையார்க்கு உற்ற குணந்திருத்த
    ஆடவர்கை கூப்பி அடிபணிந்தால் - நாடாதே

    தோயார் கபோலத்தைத் தொட்டுமுத்தம் இட்டவுடன்
    வேயனைய தோளியர்கள் மேவுவது - மாயிலெல்லாம்

    ஆடியே யுன்றனெழி லாங்கபோ லங்கணினைக்
    கூடினதால் அன்றோ குணவானே - நாடியிடும்

    பெண்ணவர்கள் தங்குணமும் பெட்பும் பெருமையுநீ
    உண்ணயந்து கண்டிருப்பாய் உத்தமனே - கண்ணிணையாய்

    உன்னையே நட்புக்கு உறுதியென எண்ணியது
    முன்னமே வள்ளுவனார் மூதுரையிற் - சொன்ன

    நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
    பண்புடை யாளர் தொடர்பாம் - புவியிற்

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதாம்
    நட்பாங் கிழமை தருமாம் - நுணுக்கமாய்ச்
    50

    சொன்ன முறையின் படிநின் தொடர்புளதாற்
    பின்னை ஒருவரையும் பேசுவனோ - கன்னியர்கள்

    அந்தக் கரணம் அவருரைக்கு முன்னேநீ
    சிந்தை தனிலுணர்ந்து தேர்ந்திடுவாய் - பந்தமெலாம்

    கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்று
    மாறாநீர் வையக் கணியென்றுங் - கூறாமுன்

    ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
    தெய்வத்தோ டொப்பக் கொளலென்றும் - வையமெலாம்

    போற்றுதிரு வள்ளுவனார் பூவுலகோர்க் கேயினிதாய்ச்
    சாற்றுபொரு ளின்பயனீ தானாமே - ஏற்றரிய

    ஆடியே என்றன் அருமை நலங்களெலாங்
    கூடி யிருந்ததிந்தக் கொற்றவனே - மூடியென்னப்

    பேய்க்குரைத்தால் உண்மையினைப் பேசமனம் நாணினதால்
    தாய்க்கொழித்த சூலுமுண்டோ தாரணியில் - சேய்க்குப்

    பசிவருத்தங் கண்டிடின்நல் பாலருத்தித் தாய்தன்
    சிசுவைப் புரக்குஞ் செயல்போல் - நிசமாக

10.8.11

கொங்கு நாட்டுப் புலவர்கள்

கொங்கு நாட்டுப் புலவர்கள் சங்க காலத்தில் பல புலவர்கள் வாழ்ந்துள்ளனர் அவர்களின் பெயர்கள்;- 1. அஞ்சி அத்தை மகள் நாகையார்-அதியமான் நெடுமான் அஞ்சியின் மனைவியார். தகடூர்-அகம்-352 2. அதியன் விண்ணத்தனார் தகடூர் நாட்டினர் அகம்-301. 3.அந்தியிளங்கீரனார்-பவானி வட்டத்து அந்தியூர்.அகம்-71 4.ஆலத்தூர்க்கிழார்-இராசிபுர வட்டத்து ஆலத்தூர்.புறம்-34,36,69,225,324.குறுந்-112,350. 5.ஆவியார்-ஆவியர்குடியினர்;பழனி.புறம்-298. 6.இரும்பிடர்த்தலையார்-குளித்தலை வட்டத்துப் பிடர்தலை.புறம்-3 7.உலகடத்துக் கந்தரத்தனார்-அந்தியூரின் தென்கிழக்கில் உள்ள உலகடம்.அகம்-95,191.நற்-238,306.குறுந்-155. 8.எருமை வெளியனார்- எருமை நாட்டு[மைசூர் நாடு] எருமையூர்.புறம்-273,303.அகம்-73. 9.எருமை வெளியனார் மகனார் கடலனார்- எருமை வெளியனார் மைந்தர்.அகம்-72. 10.கருவூர் ஓதஞானியார்.குறுந்-71,227. 11.கருவூர் கண்ணம் பாளனார்.அகம்-180,263.நற்-159. 12. கருவூர் கண்ணம் புல்லனார்.அகம்-63.நற்-159. 13.கருவூர்க் கதப்பி கருவூர் கண்ணம் ள்ளை.புறம்-380.நற்-135.குறுந்-64,265,380. 14.கருவூர்க் கதப்பிள்ளைச்சாத்தானார்.புறம்-168.அகம்-309.நற்-343. 15. கருவூர்க் கலிங்கத்தனார் அகம்-183. 16. கருவூர்க்கிழார்.குறுந்-170. 17.கருவூர்க் கோசனார்.நற்-214. 18.கருவூர்ச்சேரமான் சாத்தனார்.குறுந்-268. 19. கருவூர் நன்மார்பனார்.அகம்-277. 20. கருவூர்ப் பவுத்திரனார்.குறுந்-162. 21. கருவூர்ப் பூதஞ்சாத்தனார்.அகம்-50. 22. கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்.புறம்-219.10-22.இப் பதின்மூவரும் கொங்கு நாட்டுக் கரூர். 23.குடவாயிற் கீரத்தனார்-பல்லட வட்டத்துக் குட வாயில்.புறம்-242.அகம்-44,60,79,119,129,287,315,345,366,385.நற்-27,379.குறுந்-281,369. 24.குடவாயிற் கீரனக்கனார்-குடவாயில்.இவர் முன்னவர் மைந்தராக இருக்கலாம்.குறுந்-79. 25.குடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்-உடுமலை வட்டத்துக்குடிமங்கலம்.அகம்-179,232. 26.கொல்லிக் கண்ணனார்-கொல்லிமலை நாடு,குறுந்-34. 27.செங்குன்றூர்க்கிழார்-திருச்செங்கோடு.திருவள்ளுவ மாலை. 28.தகடூர் யாத்திரை ஆசிரியர் ஒருவர்.[பெயர் தெரியவில்லை] 29.பெந்தலைச் சாத்தனார்-பவானி வட்டத்துப் பெருந்தலையூர்.புறம்-151,164,165,205,294.அகம்-13,224.நற்-262. 30.பொன்முடியார்-தகடூர் நாட்டு பொன்முடி.பெண்புலவர்,புறம்-299,310,312. குறிப்பு;-7.உலகடம்-உரோடோகம்,ஒரோடோகம்,ஒரோடகம்,உரோடகம்,உரகடம் என,ஏடுகளிற் பலவாறாகப் பிறழ்ந்து காணப்படுகிறது. 28.குடவாயில்-இன்று,`கொடுவாய்என வழங்குகிறது.கொடுவாய்க் கல்வெட்டில் [பி3360] `கொடுவாயில்என்றுள்ளது. இடிகரைக் கல்வெட்டில்குடவாயில்ஒன்றே உள்ளது. 25.இவ்வூர்-’கொடிமங்கலம்எனவும் திரிந்து காணப்படுகிறது.[அகம்-179] ஆனால்,வழக்கில்குடிமங்கலம்என்றே வழங்குகிறது. பெயர்களுக்குப் பின்னுள்ள பாட்டெண்கள், அவர்கள் பாடிய பாடல்களின் எண்களாகும். மேற்க்கோள் நூல்கள்;- கொங்கு நாடு-புலவர் குழந்தை .94 சிற்றிலக்கியப் புலவர் அகராதி

5.8.11

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்

1. அரசியல் அறம்

1.1 கெட்டதை விடுங்கள்

    சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன்
    செய்யுறதைச் செஞ்சுடுங்க
    நல்லதுன்னா கேட்டுக்குங்க
    கெட்டதுன்னா விட்டுடுங்க

    முன்னாலே வந்தவங்க
    என்னென்னமோ சொன்னாங்க
    மூளையிலே ஏறுமுன்னு
    முயற்சியும் செஞ்சாங்க

    ஒண்ணுமே நடக்காம
    உள்ளம் நொந்து செத்தாங்க
    என்னாலும் ஆகாதுன்னு
    எனக்கும் தெரியுமுங்க ( சொல்லு )

    முடியிருந்தும் மொட்டைகளாய்
    மூச்சிருந்தும் கட்டைகளாய்
    விழியிருந்தும் பொட்டைகளாய்
    விழுந்துகிடக்கப் போறீங்களா?

    முறையைத் தெரிஞ்சு நடந்து
    பழைய நினைப்பை மறந்து
    உலகம் போற பாதையிலே
    உள்ளம் தெரிஞ்சு வாரீங்களா ( சொல்லு )

    சித்தர்களும் யோகிகளும்
    சிந்தனையில் ஞானிகளும்
    புத்தரோடு ஏசுவும்
    உத்தமர் காந்தியும்

    எத்தனையோ உண்மைகளை
    எழுதிஎழுதி வச்சாங்க
    எல்லாந்தான் படிச்சீங்க?
    என்னபண்ணி கிழிச்சீங்க? ( சொல்லு )

    [பாண்டித் தேவன்,1959]

கண்ணுள் வினைஞர்


சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் வீரயுகத்தின் கூறுகள் மிகுந்த அளவில் கலந்திருந்தன. ஆனால் முழுமையான வீரயுகச் சமூகம் என்று கூறஇயலாத வகையில், நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பின் கூறுகளும் பரவலாக இருந்தன. வீரர் குடியைச் சேர்ந்தவனான பாண்டிய மன்னன், ‘கொற்கைப் பொருநன்' (கொற்கைத் துறைமுகத்தின் போர்வீரன்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டாலும், அவன் பொருநராற்றுப் படை குறிப்பிடும் பொருநர் குடியைச் சேர்ந்தவன் அல்லன். பொருநர் குடி என்பது கழைக் கூத்தாடிகளையொத்த (சர்க்கஸ் வீரன் போன்ற) மற்போர், வாள்வீச்சு போன்ற போர் முறைகளில் தேர்ந்த நிபுணர் குடி. ஆனால் அரசர்கள் குடி என்பது சமூகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையிலிருந்த குடியாகும். நிர்வாகம், நீதி பரிபாலனம், போர்ப்படைகளை வழிநடத்துதல் போன்ற, ‘அரச தர்மம்' சார்ந்த முறையான உயர் கல்வியை அரச குடியினர் பெற்றிருந்தனர். அத்தகைய நிலையில் அரச குடியினர்க்கு மிக நெருக்கமான குடியினராகக் கருதப்பட்ட ஆசான் குடியினர் அல்லது ஆசிரியக் குடியினர் யாராக இருந்திருக்கலாம்? (தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படும்) அதங்கோட்டாசான் போன்றோரின் குலமாகக் கருதத்தக்க அரசகுலமும், சங்கறுத்து வளையல் செய்கிற நக்கீரரின் குலமாகிய கொல்லர் குலமுமே ஆசிரியர் குலம் எனக் குறிப்பிடத்தக்கவையாகக் தோன்றுகின்றன. இவ்விரு சமூகப் பிரிவினர்தவிர வானநூல், சோதிடம் போன்ற அறிவியல் துறைகளில் நிபுணர்களாக இருந்த வள்ளுவர் குலத்தவரும் ஆசான் பதவிக்குப் பொருத்தமானவர்களே. இவர்களுள் கொல்லர் சமூகப் பிரிவினைச் சேர்ந்த, சங்கறுத்து வளையல் செய்யும் பிரிவினர், ‘வேளாப்பார்ப்பனர்' (வேள்வி செய்யாத பிராமணர்) என்றே சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.5 நக்கீரர் பற்றிய பிற்காலக் கதைகள், அவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்ததோடு, “ஆரியம் நன்று தமிழ் தீது” என்றுரைத்த குயக்கோடன் என்பவனை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச்செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்றும் குறிப்பிடுகின்றன.6 இத்தகைய பல குறிப்புகளைச் சங்க கால வாழ்வியலோடு தொடர்புபடுத்திப் பார்த்தால் அரசர்களின் படைக் கலன்கள், மணிமுடி போன்றவற்றையும் அரியணை அல்லது அரசு கட்டில், அரண்மனை முதலானவற்றையும் உருவாக்கிப் படைத்தளித்த விஸ்வகர்ம சமூகத்தவரே ஆசான்களாக இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். ஆதிச்சநல்லூர்ப் புதைகுழிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உலோகப் பொருள்களை உருவாக்கியவர்கள் சமூக அந்தஸ்தில் உயர்வாகக் கருதப்பட்ட ஆச்சார்ய மரபினராகவே இருந்திருக்க வேண்டும். இத்தகைய தச்சர் - கொல்லர் சமூகத்தவரின் தலைநகர இருக்கையாகத் திகழ்ந்தமையால்தான் (கொல்லுத் தொழில் இருக்கை) கொற்கை என்ற ஊர்ப்பெயர் உருவாகி இ¢ருக்கவேண்டும். கொற்கை, ஆதிச்சநல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொற்கையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் நக்கீரரை நினைவூட்டும் வகையில் கீரனூர் என்ற ஊரும் உள்ளது.

‘வேள்வி செய்யாத பார்ப்பனர்' எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுவது வேறொரு வகையிலும் கவனத்துக்குரியதாகும். வேள்விச் சடங்குகளைப் புறக்கணித்த வைதிக சமயத்தவரை விராத்யர் எனப் புராணங்களும், தர்ம சாஸ்திர நூல்களும் குறிப்பிடுகின்றன. முதுமக்கள் தாழிப் பண்பாடு அதாவது இரும்பு யுகத்தை அறிமுகப்படுத்திய பெருங்கற்படைப் பண்பாடு என்பதே விராத்யர்களுடைய பண்பாடுதான் என்பது அறிஞர் அஸ்கோ பர்போலா அவர்களின் கருத்து.7 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்ட ‘சாதிநூல்', விஸ்வகர்ம சமூகத்தவரை ‘விராத்யர்' பிரிவிலேயே சேர்க்கிறது.8

விஸ்வகர்ம சமூகத்தவர் பலர், சமண பெளத்த சமயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அச்சமயங்களை ஆதரித்தனர். கருங்கல்லை மரணச் சடங்குகளோடு மட்டுமே வைதிக சமயம் தொடர்புபடுத்திற்று. பெருங்கற்படைப் பண்பாட்டின் அரச குருக்கள் மரபினரான விஸ்வகர்ம சமூகத்தவர், சமண பெளத்தப் பள்ளிகளை உருவாக்கவும், அப்பள்ளிகளுள் கற்படுக்கைகள் அமைக்கவும், கற்படுக்கைகள் அமைக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு எழுத்தின் மூலம் அறிவிக்கவும் செய்தனர். எழுத்து என்ற சொல் தொடக்கத்தில் ஓவியத்தையே குறித்தது. ஓவிய எழுத்துகளிலிருந்தே ஓரொலிக்கு ஓர் எழுத்து என்ற அகர ஆதி எழுத்துகள் உருவாயின. எனவே, ஓவியச் செந்நூல் உருவாக்கிய விஸ்வகர்ம சமூகத்தவரே எழுத்துகளை வடிவமைத்திருக்க வேண்டும். ‘கண்ணுள் வினைஞர்' எனச் சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடும் சொல்லாட்சியையும் எழுத்தினைக் குறிப்பதற்கு வடமொழியில் வழங்குகிற ‘அக்ஷரம்' (அக்ஷம் = கண்) என்ற சொல்லையும் ஒப்பிட்டால் இவ்வுண்மை புலப்படும். ‘அக்ஷசாலி' என்ற தொடரின் திரிபான ‘அக்க சாலி' என்பதே கன்னட மொழியில் பொற்கொல்லர்களைக் குறிக்கப் பயன்படும் சொல்லாகும்.

4.8.11

சிந்து இலக்கியம்

சிந்து இலக்கியம்
1. பழனியாண்டவன் காவடிச் சிந்து

நூலாசிரியர்: முத்துக் கறுப்பணன்
பழனிப்பதி வாழும் - வேலர்
பாதம்தனை நாளும்
உளமேதினம் துதிக்க - வினை
ஒடுக்கும் கதிகொடுக்கும்
வளமேவிய பரனே - சுத்த
மடவாழு தந்திமுகனே
அழகாகிய குருவாய் - எனக்
கருள்வாய் முன்பு வருவாய்
1. சுத்தமடம் - ஊர்; தந்திமுகன் - விநாயகர் 1

சிவகிரியில் வாழ்வோன் - எனைத்
தினமும் குடி ஆழ்வோன்
தவமேவிய குமரன் - புகழ்
தானே அடியேனே
நவமீறிய காவடிச் - சிந்து
நாடத் தினம் பாட
புவனச் சரசுவதியே - சிந்து
புகல வருவாயே
2. சிவகிரி - கயிலாயம், இங்குப் பழனியில் உள்ள சிவமலையைக் குறிக்கிறது.
நவமீறிய - புதுமை மிகுந்த; புவனம் - உலகம் 2

கள்ளமாய் அன்று வனத்தில் - வள்ளி
கானத் தினைப் புனத்தில்
உள்ளமே மகிழ்வாகிக் - கிழ
உருவாய்ப் பரண் ஏகி
தெள்ளிய தினை மாவை - பொசித்
திலகும் அண்டர் கோவை
வள்ளி நாயகப் பொருளைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
3. கள்ளமாய் - களவு நிலையில்; பொசித்திலகு - உண்டு விளங்கும் 3

துண்ட வெண்பிறை அணிவோன் - அருள்
சுத்தனைப் பரிசுத்தனை
அண்டர் கோன் பயம் - தீர்ப்போன்
அடியாரைத் தினம்காப்போன்
எண்டிசை பணி நேசன் - தவம்
இலகும் கிரிவாசன்
வண்டமிழ்ப் பழனியனைக் - கொண்டு
வருவாய் தோகைமயிலே
4. துண்ட வெண்பிறை - பிறைச் சந்திரன்
துண்ட வெண்பிறை அணிவோன் அருள் சித்தன் - சிவனார் அளித்த முருகன்
அண்டர்கோன் - தேவேந்திரன்; கிரிவாசன் - மலை வாழ்பவன் 4

செய்ய தாண்டவ ராயன் - அருள்
சேயனைக் கார்த்தி கேயனை
துய்ய குஞ்சரி பங்கனை - அயில்
துலங்கும் கர துங்கனை
உய்யவே அருள் கொடுப்போன் - அன்பர்
உளத்தில் குடி இருப்போன்
வையகம் புகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
5. தாண்டவ ராயன் - ஆடல்வல்லான்
சேயன் - மகன்; முருகன்; அயில் - வேல்; துங்கன் - மேன்மை உடையோன்
குஞ்சரி - தெய்வயானை 5

ஆனைமா முகன் துணைவன் - வள்ளிக்
கழகாகிய கண்ணன்
ஞானதே சிக போதன் - நவ
வீரரும் பணி நீதன்
தேனுலா விய கடப்ப - மலர்
செறிவோன் அருள் புரிவோன்
வானவர் பணி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
6. போதன் - அறிவுடையோன், அறிவளிப்போன்
நவவீரர் - வீரவாகு தேவர் உள்ளிட்ட ஒன்பது பேர்
நீதன் - நீதி உள்ளவன், தலைவன்; செறிவோன் - சூடுவோன் 6

திங்கள் சேர் நுதல் - மீனாள்
தருதேனை முருகோனை
எங்கள் நாயகப் பொருளை - பணிந்
தேற்றார் மனத் திருளைத்
துங்கமா மனம் தேம்பிட்டேன் - உனைத்
தொழுதே நிதம் கும்பிட்டேன்
மங்களம் உயர் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
7. திங்கள் சேர்நுதல் மீனாள் - பார்வதி
ஏற்றார் - கொண்டார்; துங்க - பெரிய; தேம்பிட்டேன் - கலங்கிட்டேன் 7

இச்செகம் தனில் அடியேன் - உனை
ஏற்ற தினம் போற்ற
மிச்சமாய்க் கலிவருத்த - நான்
மெலிவேனோ அலைவேனோ
அச்சமாய்த் துயர் ஓட - அருள்
நாடகக் கவி பாட
வச்சிரம் திகழ் வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
8. மிச்சமாய் - மிகுதியாய்; கலி - வறுமை; வச்சிரம் - வைரமணி, கூர்மை
வச்சிரம் திகழ் வேல் - வைரவேல் அல்லது கூர்வேல் 8

பூசுரர் வெகுமானி - சிவப்
பொருப்பில் வளர் ஞானி
தேச மேழும் புகழ் - காவடிப்
பூசை சிறக்கும் தமிழ்புரக்கும்
$........ ......... ......... ........
........ ......... ......... ........
வாசனை வடி வேலனைக் - கொண்டு
வருவாய் தோகை மயிலே
9. $ ஒருவரி விடுபட்டிருக்க வேண்டும்.
பூசுரர் - அந்தணர்; சிவப்பொருப்பு - கயிலைமலை; புரக்கும் - காக்கும் 9

படியெழும் புகழ் இடும்பன் - தினம்
பணியும் மலர்க் கடம்பன்
அடியார் வினை பொடி - செய்திடும்
மான புகழ் குமரன்
துடிமீறு மும்முரசன் - தெய்வம்
தொழுவாழ் கொலு வாசன்
வடிவேல் முருகனையே - கொண்டு
வருவாய் தோகை மயிலே
10. இடும்பன் - குமரனின் ஏவல் செய்வோன்
பொடி செய்திடும் - அழித்திடும்; மானபுகழ் - பெரும்புகழ்
துடிமீறு - மேன்மை மிகுந்த, முழக்கமிகுந்த
மும்முரசு - மங்கல முரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு 10

கர்த்தனாகிய முருகன் - அருள்
கனியும் திரு மருகன்
பத்தர்கள் மிக வாழி! - நிதம்
படிப்போர் தினம் வாழி!
சுத்தமா நகர் வாழும் - முத்துக்
கறுப்பணன் சொல் நாளும்
சித்தமேவிய பெரியோர் - தினம்
செழித்து மிக வாழி!
11. கர்த்தன் - தலைவன்; திரு - திருமகள்
முத்துக் கறுப்பணன் - நூலாசிரியர்; சித்தம் - உள்ளம் 11


பழனியாண்டவன் காவடிச் சிந்து முற்றும்

1.8.11

பழனி இரட்டைமணி மாலை




பழனி இரட்டைமணி மாலை


[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]

காப்பு

ஞான விரகறியா நானுஞ் சிலதமிழால்
வானவரேத் தும்பழனி வந்தானைத்-தானவரை
வென்றானை வாழ்த்த விரைப்பா திரிவனஞ்சேர்
கன்றானை மாமுகத்தோன் காப்பு.

நூல்
பூமாது கேள்வன் புகழ்மருகன் பொய்யாத
பாமாது வாழ்த்தும் பழனியான்-நாமத்
தனிவேலை யுந்தோகை தன்னையுமே பாட
இனிவேலை கண்டீ ரெமக்கு. [1]

எம்மைப் புரக்குஞ் சிவகிரி யானெம் மிரவொழிக்கும்
செம்மைத் தனிச்சுடர் தேவசிந் தூரந்தெய் வானைவள்ளி
யம்மைக் கிறைபொன் னடிகளல் லாம லடியவர்கள்
வெம்மைப் பிறவிப் பிணிக்கொரு மூலிகை வேறில்லையே. [2]

வேறோ விளக்கும் விளக்கொளியும் வேறிரண்டு
கூறோ நவரசமுங் கூத்தாட்டும் - நாறுமலர்க்
கள்ளுயிர்க்குந் தென்பழனிக் கந்தன் குருபரனென்
உள்ளுயிர்க்கு வேற்றுமையா மோ. [3]

ஆமோ திருவெழுத் தாற்றி யாததென் றஞ்சலிலா
நாமோவை காபுரி நாட்டிருப் போம்வினை நம்மைவிட்டுப்
போமோ கொடுவினை போய்விட வேண்டிற் புனக்குறத்தி
மாமோக வேலன் பழனியை வாழ்த்தென் மடநெஞ்சமே. [4]

நெஞ்ச முருகா நிதிப்பெருக்க ரோவெனக்கோர்
தஞ்ச முருகா தனிமுதல்வா-செஞ்சதங்கைத்
தாளுடையாய் தென்பழனிச் சண்முகா பன்னிரண்டு
தோளுடையாய் நீயே துணை. [5]

துணைக்குங் குமக்கொங்கை மங்கையுந் தானுந்த்ரி சூலனெடுத்
தணைக்குங் குழந்தை பழனிப் பிரான்விளை யாட்டென் சொல்கேன்
கணைக்குங் கடுங்கதிர்ச் செவ்வேல்விட் டேழு கடல்கலக்கும்
பணைக்குந் திசைக்களி றோரெட்டு மேவிடும் பாய்ச்சலுக்கே. [6]

பாயிருள்போற் சூர்மாப் பயந்தோடப் பானுவெனத்
தீயுமிழுங் கூரிலைவேற் செவ்வேளே-கோயிலுனக்
கேரகமோ வெங்கணுமோ வென்னெஞ்ச மோதிருச்செந்
தூரகமோ தென்பழனி யோ. [7]

ஓங்கார மான முருகோன் மருங்கி லொருகைவைத்து
நீங்கா தொருகை பிடித்ததண் டாயுத நெஞ்சைவிட்டு
வாங்கா திவனைப் பழனிவெற் பேறி வணங்கினர்க்குத்
தீங்கா னதுவரு மோபொரு மோநமன் சேனைகளே. [8]

சேனைத் திரளுநெடுஞ் செங்கோலு மங்கையரும்
ஏனைத் திருவு மௌிதன்றோ-நானிலத்து
நம்பிடுவார்க் கும்பழனி நாட்டுக் குருபரனைக்
கும்பிடுவார் தம்மடியார்க் கும். [9]

அடியார்க் கௌிய பழனிப் பிரானுல கன்றளந்த
நெடியார்க்கு மார்க்கு நினைப்பரி யான்பக்க நின்றதெய்வப்
பிடியார்க் கிறைவன் பெயர்சொன்ன பேரைப் பிடிக்கிலன்னக்
கொடியார்க்குப் பூட்டுந் தளைபூட்டு வன்கொடுங் கூற்றிற்குமே. [10]

கூற்றையோ திங்கட் கொழுந்தென்றீர் கூற்றுயிர்த்த
காற்றையோ தென்றலிளங் கன்றென்றீர்-தேற்றக்
கடவீ ரெனிற்பழனிக் கந்தவேண் முன்போய்
மடவீர் மொழிவீரென் மால். [11]

மாலையுஞ் சாந்தும் புழுகோ டளைந்தபொன் மார்பையுமுந்
நூலையுந் தென்பழ னிப்பெரு மானன்பர் நோய்தணிக்கும்
வேலையும் பச்சை மயில்வாக னத்தையும் வெற்றித்தண்டைக்
காலையுஞ் சென்று தொழவேண்டு மாலையுங் காலையுமே. [12]

காலைக் கமலமுகங் காட்டநெய்தல் கண்காட்ட
மாலைக் குமுதமெலாம் வாய்மலர-நூலிடையார்
கூந்தலெனப் பாசிவளர் கோட்டஞ்சூழ் தென்பழனிச்
சேந்தனிடத் தன்றோ செகம். [13]

செகத்தா ரொருவர் திருவாவி னன்குடிச் செல்வன்றன்னை
அகத்தா மரைவைத்துப் பூசைசெய் தாரகத் தாமரைக்கே
நகத்தா மரையிரண் டுள்ளே நடிக்கு நடம்புரிவான்
முகத்தா மரைகளிற் பன்னிரு தாமரை முன்னிற்குமே. [14]

முன்னிற்குந் தென்பழனி முத்துக் குமாரநீ
மன்னிக்கு மன்னருட்கோர் மட்டுண்டோ-உன்னமகிழ்
பார்ப்பானை லோகம் படையென்றாய் மூவடிமண்
ஏற்பானைக் காவென்றா யே. [15]

ஏட்டுக் கணக்கு மெழுத்தாணி தேய்ந்தது மியாங்கள்விற்ற
பாட்டுக் கணக்கும் பலன்பெற லாமென்று பாடிச்சென்ற
வீட்டுக் கணக்குந் தொகைபார்க்கிற் கார்க்கடல் வெண்மணலைக்
கூட்டிக் கணக்கிட லாமே பழனிக் குருபரனே. [16]

குருமூர்த்தி யாய்க்குடிலை கூறியிட்ட வுன்னை
ஒருமூர்த்தி யென்னா துலகம்-இருமூர்த்தி
மும்மூர்த்தி யாய்ப்பழனி மூர்த்தியே கீர்த்திபுனை
எம்மூர்த் தியுமான தென். [17]

என்னையும் பார்க்கச் சிறியோர் பிறப்பு மிறப்புமிலா
உன்னையுந் தெய்வமென் றோதிய நாவி னுலப்பவரைப்
பின்னையுந் தெய்வங்க ளென்பார் பழனிப் பிரான்குமரா
பொன்னையும் பொன்னென் றுரைப்பா ரிரும்பையும் பொன்னென்பரே. [18]

பொற்கன்னி காரவனம் பூங்கற் பகவனமாச்
சொற்க நிகர்பழனித் தூயோனே-நற்கனியைத்
தந்தா வளமுகத்தான் றந்தருள வந்தருள்வாய்
நந்தா வளமெனக்கு நல்கு. [19]

நல்லார்முன் னெங்ஙன முய்யவல் லேன்பழ நான்மறையும்
வல்லாய் பழனி மலைவள்ள லேயிரு மங்கையர்க்கும்
சல்லாப லீலைத் தலைவாவென் னோயைத் தணிக்கும்வண்ணம்
பொல்லா வினைவற்சி யென்றர்ச்சி யேனொரு பூவெடுத்தே. [20]