1.8.11

பழனி இரட்டைமணி மாலை




பழனி இரட்டைமணி மாலை


[குறிப்பு. ஒற்றைப்படை எண் பாடல்கள் வெண்பாவிலும், இரட்டைப்படை எண் பாடல்கள் கட்டளைக்கலித்துறையிலும் எழுதப்பட்டுள்ளது]

காப்பு

ஞான விரகறியா நானுஞ் சிலதமிழால்
வானவரேத் தும்பழனி வந்தானைத்-தானவரை
வென்றானை வாழ்த்த விரைப்பா திரிவனஞ்சேர்
கன்றானை மாமுகத்தோன் காப்பு.

நூல்
பூமாது கேள்வன் புகழ்மருகன் பொய்யாத
பாமாது வாழ்த்தும் பழனியான்-நாமத்
தனிவேலை யுந்தோகை தன்னையுமே பாட
இனிவேலை கண்டீ ரெமக்கு. [1]

எம்மைப் புரக்குஞ் சிவகிரி யானெம் மிரவொழிக்கும்
செம்மைத் தனிச்சுடர் தேவசிந் தூரந்தெய் வானைவள்ளி
யம்மைக் கிறைபொன் னடிகளல் லாம லடியவர்கள்
வெம்மைப் பிறவிப் பிணிக்கொரு மூலிகை வேறில்லையே. [2]

வேறோ விளக்கும் விளக்கொளியும் வேறிரண்டு
கூறோ நவரசமுங் கூத்தாட்டும் - நாறுமலர்க்
கள்ளுயிர்க்குந் தென்பழனிக் கந்தன் குருபரனென்
உள்ளுயிர்க்கு வேற்றுமையா மோ. [3]

ஆமோ திருவெழுத் தாற்றி யாததென் றஞ்சலிலா
நாமோவை காபுரி நாட்டிருப் போம்வினை நம்மைவிட்டுப்
போமோ கொடுவினை போய்விட வேண்டிற் புனக்குறத்தி
மாமோக வேலன் பழனியை வாழ்த்தென் மடநெஞ்சமே. [4]

நெஞ்ச முருகா நிதிப்பெருக்க ரோவெனக்கோர்
தஞ்ச முருகா தனிமுதல்வா-செஞ்சதங்கைத்
தாளுடையாய் தென்பழனிச் சண்முகா பன்னிரண்டு
தோளுடையாய் நீயே துணை. [5]

துணைக்குங் குமக்கொங்கை மங்கையுந் தானுந்த்ரி சூலனெடுத்
தணைக்குங் குழந்தை பழனிப் பிரான்விளை யாட்டென் சொல்கேன்
கணைக்குங் கடுங்கதிர்ச் செவ்வேல்விட் டேழு கடல்கலக்கும்
பணைக்குந் திசைக்களி றோரெட்டு மேவிடும் பாய்ச்சலுக்கே. [6]

பாயிருள்போற் சூர்மாப் பயந்தோடப் பானுவெனத்
தீயுமிழுங் கூரிலைவேற் செவ்வேளே-கோயிலுனக்
கேரகமோ வெங்கணுமோ வென்னெஞ்ச மோதிருச்செந்
தூரகமோ தென்பழனி யோ. [7]

ஓங்கார மான முருகோன் மருங்கி லொருகைவைத்து
நீங்கா தொருகை பிடித்ததண் டாயுத நெஞ்சைவிட்டு
வாங்கா திவனைப் பழனிவெற் பேறி வணங்கினர்க்குத்
தீங்கா னதுவரு மோபொரு மோநமன் சேனைகளே. [8]

சேனைத் திரளுநெடுஞ் செங்கோலு மங்கையரும்
ஏனைத் திருவு மௌிதன்றோ-நானிலத்து
நம்பிடுவார்க் கும்பழனி நாட்டுக் குருபரனைக்
கும்பிடுவார் தம்மடியார்க் கும். [9]

அடியார்க் கௌிய பழனிப் பிரானுல கன்றளந்த
நெடியார்க்கு மார்க்கு நினைப்பரி யான்பக்க நின்றதெய்வப்
பிடியார்க் கிறைவன் பெயர்சொன்ன பேரைப் பிடிக்கிலன்னக்
கொடியார்க்குப் பூட்டுந் தளைபூட்டு வன்கொடுங் கூற்றிற்குமே. [10]

கூற்றையோ திங்கட் கொழுந்தென்றீர் கூற்றுயிர்த்த
காற்றையோ தென்றலிளங் கன்றென்றீர்-தேற்றக்
கடவீ ரெனிற்பழனிக் கந்தவேண் முன்போய்
மடவீர் மொழிவீரென் மால். [11]

மாலையுஞ் சாந்தும் புழுகோ டளைந்தபொன் மார்பையுமுந்
நூலையுந் தென்பழ னிப்பெரு மானன்பர் நோய்தணிக்கும்
வேலையும் பச்சை மயில்வாக னத்தையும் வெற்றித்தண்டைக்
காலையுஞ் சென்று தொழவேண்டு மாலையுங் காலையுமே. [12]

காலைக் கமலமுகங் காட்டநெய்தல் கண்காட்ட
மாலைக் குமுதமெலாம் வாய்மலர-நூலிடையார்
கூந்தலெனப் பாசிவளர் கோட்டஞ்சூழ் தென்பழனிச்
சேந்தனிடத் தன்றோ செகம். [13]

செகத்தா ரொருவர் திருவாவி னன்குடிச் செல்வன்றன்னை
அகத்தா மரைவைத்துப் பூசைசெய் தாரகத் தாமரைக்கே
நகத்தா மரையிரண் டுள்ளே நடிக்கு நடம்புரிவான்
முகத்தா மரைகளிற் பன்னிரு தாமரை முன்னிற்குமே. [14]

முன்னிற்குந் தென்பழனி முத்துக் குமாரநீ
மன்னிக்கு மன்னருட்கோர் மட்டுண்டோ-உன்னமகிழ்
பார்ப்பானை லோகம் படையென்றாய் மூவடிமண்
ஏற்பானைக் காவென்றா யே. [15]

ஏட்டுக் கணக்கு மெழுத்தாணி தேய்ந்தது மியாங்கள்விற்ற
பாட்டுக் கணக்கும் பலன்பெற லாமென்று பாடிச்சென்ற
வீட்டுக் கணக்குந் தொகைபார்க்கிற் கார்க்கடல் வெண்மணலைக்
கூட்டிக் கணக்கிட லாமே பழனிக் குருபரனே. [16]

குருமூர்த்தி யாய்க்குடிலை கூறியிட்ட வுன்னை
ஒருமூர்த்தி யென்னா துலகம்-இருமூர்த்தி
மும்மூர்த்தி யாய்ப்பழனி மூர்த்தியே கீர்த்திபுனை
எம்மூர்த் தியுமான தென். [17]

என்னையும் பார்க்கச் சிறியோர் பிறப்பு மிறப்புமிலா
உன்னையுந் தெய்வமென் றோதிய நாவி னுலப்பவரைப்
பின்னையுந் தெய்வங்க ளென்பார் பழனிப் பிரான்குமரா
பொன்னையும் பொன்னென் றுரைப்பா ரிரும்பையும் பொன்னென்பரே. [18]

பொற்கன்னி காரவனம் பூங்கற் பகவனமாச்
சொற்க நிகர்பழனித் தூயோனே-நற்கனியைத்
தந்தா வளமுகத்தான் றந்தருள வந்தருள்வாய்
நந்தா வளமெனக்கு நல்கு. [19]

நல்லார்முன் னெங்ஙன முய்யவல் லேன்பழ நான்மறையும்
வல்லாய் பழனி மலைவள்ள லேயிரு மங்கையர்க்கும்
சல்லாப லீலைத் தலைவாவென் னோயைத் தணிக்கும்வண்ணம்
பொல்லா வினைவற்சி யென்றர்ச்சி யேனொரு பூவெடுத்தே. [20]